நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 206 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சரவைப் பதவிகளைத் தீர்மானிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாள்களில் புது டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் கட்சியின் தேசிய நாடாளுமன்ற குழுவினருடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தவுள்ளார். நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் நிதின் நபின் ஆகியோருக்கு இடையிலான கூட்டத்தில் முதலமைச்சர் யார் என்பது இறுதி செய்யப்படும். அதே சமயம் மத்திய பார்வையாளர்கள் மற்றும் மாநிலத் தலைவர்களிடமிருந்தும் பா.ஜ.க தலைமை கருத்துக்களைப் கேட்க இருக்கிறது.
முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, துணை முதலமைச்சர் ஒருவரை நியமிப்பது குறித்தும் கட்சி பரிசீலித்து வருகிறது. இதற்காக மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் சாமிக் பட்டாச்சார்யா மற்றும் சுவேந்து அதிகாரி ஆகியோர் அடுத்த சில நாள்களுக்கு புது டெல்லியிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறுகையில்,”முதலில் முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுவார், அதனைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வேட்பாளர்கள் குறித்த கலந்துரையாடல்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கும்.
மூத்த தலைவர்களுக்கும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கப்படும். புதிய அமைச்சரவையைக் முடிவு செய்யும்போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த தொண்டர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆர்.எஸ்.எஸ்., அமைப்போடு தொடர்புடைய 100-க்கும் மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அமைச்சர்கள் பட்டியலில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும்” என்று கூறினார். ஸ்வபன் தாஸ்குப்தா, அக்னிமித்ரா பால், நிஷித் பிரமாணிக், ரிதேஷ் திவாரி, ரூபா கங்குலி மற்றும் ருத்ரானில் கோஷ் போன்ற தலைவர்களின் பெயர்கள் அமைச்சர் பதவிக்கு முக்கியமாகப் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
8 மாவட்டங்களில் பா.ஜ.கவிற்கு முழு வெற்றி
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 8 மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளையும் பிடித்து இருக்கிறது. குறிப்பாக கிழக்கு மிட்னாபூர் பகுதியில் உள்ள 16 தொகுதிகளிலும் பா.ஜ.க வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருக்கின்றனர். இந்த மாவட்டம் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இங்குதான் நந்திகிராம் சட்டமன்ற தொகுதியும் இருக்கிறது. இந்த மாவட்டத்தை சேர்ந்த சுவேந்து அதிகாரி அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெறச்செய்துள்ளார். மலைப்பகுதியான டார்ஜிலிங் மற்றும் கலிம்போங்கில், பாஜக தனது கோட்டைகளைத் தக்க வைத்துக் கொண்டது. டார்ஜிலிங்கில், பாஜக ஆதரவு பெற்ற ஜிஜேஎம் வேட்பாளர் நோமன் ராய், திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு பெற்ற பிஜிபிஎம்-இன் வலுவான சவாலை முறியடித்தார்.
குர்சியோங்கிலும், கடும் போட்டிக்கு மத்தியிலும் பாஜக வெற்றி பெற்றது. இமயமலை மற்றும் துணை-இமயமலைப் பகுதிகள் முழுவதிலும் — அதாவது டார்ஜிலிங், காலிம்பொங், ஜல்பைகுரி மற்றும் அலிபுர்துவார் ஆகிய இடங்களில் பாஜக ஆதிக்கம் அதிகமாக இருந்தது. தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும், அப்பிராந்திய சமூகத்தினர் மத்தியிலும் இழந்த ஆதரவை மீட்டெடுப்பதற்காகத் தொடர் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் தனது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள இயலவில்லை. இதே போன்று புருலியா மாவட்டத்தில் இருந்த 9 தொகுதிகளிலும், பங்குரா மாவட்டத்தில் இருந்த 12 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.




