திமுக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாலும் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த முறை அங்கு வெற்றிபெற தீவிரம் காட்டி வருகிறது. திமுக மேற்கு மண்டல பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் திமுக தொகுதிவாரியாக தேர்தல் அலுவலகங்களைத் திறந்து வருகிறது. இந்நிலையில் தொண்டாமுத்தூர் தொகுதிக்கான திமுக தேர்தல் அலுவலகம் குனியமுத்தூர் பகுதியில் நேற்று திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி, “2026 சட்டமன்றத் தேர்தலுக்காக நமக்கு வாக்களிக்காதவர்களிடமும் அரசின் திட்டங்களை எடுத்துச் சொல்லி அவர்களை நம் வாக்காளர்களாக மாற்ற வேண்டும். அப்படி செய்தால் தொண்டாமுத்தூர் தொகுதியில் உதயசூரியன் வெல்லும்.

2021 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியில் கூட நாம் வெல்லவில்லை. ஆனாலும் முதலமைச்சர் அதிகமாக வந்ததும், அதிக திட்டங்களைக் கொடுத்ததும் கோவை மாவட்டத்துக்குத்தான்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் வென்று கொடுப்பதுதான் முதலமைச்சருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன். முக்கியமாக தொண்டாமுத்தூரில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்ற சரித்திர சாதனையை உருவாக்க வேண்டும்.

மேடையில் உள்ள நிர்வாகிகள் சரியாகப் பணியாற்றவில்லை என்றால் கீழே அமர வேண்டும். அதேபோல கீழே இருப்பவர்கள் நன்கு பணியாற்றினால் அவர்கள் மேடைக்கு வரலாம். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கட்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று எச்சரிக்கிறேன்” என்றார்.




