2009, மே மாதம் 17,18,19 ஆகிய தேதிகளில் ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில், பல்வேறு தமிழ்த்தேசிய – திராவிட இயக்கங்களும் இனப்படுகொலை நாளுக்கு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவது வாடிக்கை.
அவ்வகையில், மே17 இயக்கம் நேற்று (17.05.2026) மாலை 4.30 மணியளவில் பெசன்ட் நகர் கடற்கரையில், தொடர்ச்சியாக 17 வது ஆண்டாக இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வை நடத்தியது.
நிகழ்வின் தொடக்கமாக, மையம் கலைக்குழுவினரால் பறையிசை முழக்கப்பட்டது.
அடுத்ததாக, இளம் வயது பெண்கள் குழுவினர் தமிழீழப் போராட்டத்தை போற்றும் பாடலொன்றை பாடினர்.
அதன் தொடர்ச்சியாக பேசிய, மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, மே 18 அன்று இனப்படுகொலை நாளை தமிழர்கள் அனுசரிக்க வேண்டியதன் அவசியத்தை கூறியதோடு, “முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை தான்” என அங்கீகரித்து அதில் ஈடுபட்ட இலங்கையையும் உதவிய இன்னபிற நாடுகளையும் போர்க்குற்றவாளியாக அறிவிக்க ஐ.நா சபை முன்னெடுப்பில் நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.
தொடர்ச்சியாக பேசியவர், முள்ளிவாய்க்காலில், இலங்கை இராணுவம் நிகழ்த்திய, மனித உரிமை மீறல்களை, போர்க்குற்றங்களை, பெண்கள், குழந்தைகள் மீதான கரிசனமற்ற கடும் தாக்குதல்களை பட்டியலிட்டு அம்மிகப்பெரிய அநீதிக்கெதிராக உலகம் மௌனம் காத்த அவலம் குறித்து வருந்தினார்.

அத்துடன், தமிழ்நாட்டு தமிழர்களும் அதை தடுக்க முடியாமல் பரிதவித்த ஆதங்கத்தை பகிர்ந்துகொண்டார்.

இனியாவது, உலகத் தமிழர்கள் விழித்துக்கொண்டு இனப்படுகொலைக்கு நீதி கேட்டு உலக நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அழுத்தம் தர வேண்டும். இலங்கை, பேரினவாத அரசின் வன்முறைகளிலிருந்து ஈழத்தமிழர்கள் நிரந்தர விடுதலையடைய “தனித் தமிழீழமே ஒரே தீர்வு” அதை, பெற்றுத்தர, அங்கீகரிக்க உலக நாடுகள் முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
பின்னர், கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியில் சுடரேற்றினர்.

அங்கு, கூடியிருந்த தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டவர்களும் கையில் மெழுகேற்றியும், அலைபேசியில் டார்ச் அடித்தும் “தமிழீழமே ஒரே தீர்வு. தமிழீழம் மலரட்டும்” என்றெல்லாம் முழக்கம் எழுப்பி இனப்படுகொலையில் இறந்துபோன ஈழத்தமிழர்க்கு வீரவணக்கம் செலுத்தினர்.
இறுதியாக, மணற்மேட்டில் பதிக்கப்பட்டிருந்த பாலசந்திரன் புகைப்படத்திற்கு ஒவ்வொருவராக மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
– இராகுல் லட்சுமி




