தமிழகத்தில் ஒரு ராஜ்ய சபா எம்.பி இடம் காலியாக இருக்கும் நிலையில், அந்த ஒரு இடத்தை தவெகவிடம் கேட்டுப் பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறது காங்கிரஸ். இந்நிலையில், இன்று தலைமைச் செயலகம் வந்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் முதல்வர் விஜய்யை சந்தித்து தங்கள் தரப்பு கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.
அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே தன்னுடைய ராஜ்ய சபா எம்.பி பதவியையும் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை எம்.பிக்கான இடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஜூன் 1 ஆம் தேதி முதல் இந்த எம்.பி பதவிக்கான வேட்புமனு தாக்கலும் தொடங்கியிருந்தது. ஜூன் 8 ஆம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த ஒரு எம்.பி பதவி தவெகவுக்கே கிடைக்கும். இந்நிலையில்தான், தவெகவுக்கு கிடைக்கும் அந்த எம்.பி பதவியை தங்களுக்கு கொடுக்குமாறு காங்கிரஸ் தரப்பில் கேட்டிருக்கின்றனர். காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கரும் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில், ‘தவெகவிடம் ராஜ்யசபா எம்.பி சீட்டை கேட்டுப் பெறுவோம்’ என்றார்.

இந்நிலையில் கிரிஷ் சோடங்கர் இப்போது முதல்வர் விஜய்யை சந்திக்க தலைமைச் செயலகம் வந்திருக்கிறார். இந்த சந்திப்பில் அந்த ஒரு ராஜ்ய சபா எம்.பி இடத்தை தங்களுக்கு கொடுக்குமாறு கிரிஷ் சோடங்கர் வலியுறுத்தவிருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் தகவல் கூறுகின்றனர்.
காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவோடுதான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருப்பதால் விஜய் இந்த விவகாரத்தில் கவனமாகவே முடிவெடுப்பார் என அனுமானிக்கப்படுகிறது.




