12
March, 2025

A News 365Times Venture

12
Wednesday
March, 2025

A News 365Times Venture

தொகுதி மறுவரையறை : 'ஜனநாயக முத்திரையோடு பெரும்பான்மைவாதம்' – கி.வெங்கட்ராமன் | களம் பகுதி 1

Date:

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’

இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது Delimitation – `தொகுதி மறுவரையறை’ விவகாரம். பல்துறைகளை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் தினம் ஒருவர் என அது குறித்து விரிவாக தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளார்கள்.

எழுத்து : கி.வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்)

நாடாளுமன்ற மக்களவையை 2026-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் மறு சீரமைப்பு செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது `இந்தி இன’ ஆதிக்கத்தை நாடாளுமன்ற சனநாயகம் என்ற பெயரிலேயே வலுப்படுத்தி தமிழினத்தை வஞ்சிக்கும் திட்டமாகும்.

இப்போதுள்ள 543 நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே தமிழினத்திற்கு புதுச்சேரியையும் சேர்த்து 40 உறுப்பினர்களே உள்ளனர். ஆனால், இந்தி மாநிலங்களுக்கு 225 உறுப்பினர்கள் உள்ளனர். இதுவே இனச் சமநிலைக்கு எதிரானதாகும்.

இப்போது 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகையை, அதன் வளரச்சி விகிதத்தின் அடிப்படையில் 2026-ம் ஆண்டிற்குக் கணக்கிட்டு, அதனடிப்படையில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றம்

குடும்பக் கட்டுப்பாடு

இந்திய அரசு அறிவித்த குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைச் செயல்படுத்திய முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதால் இதன் மக்கள்தொகை வளர்ச்சிவிகிதம் படிப்படியாகக் குறைந்து, இப்போது மக்கள்தொகை சுருக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மறுபுறம், இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்தாத உ.பி. பீகார் உள்ளிட்ட இந்தி மாநிலங்களில் மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்தது.

இந்தி மாநிலங்கள் Vs தமிழ்நாடு

இந்திய அரசின் திட்டப்படி புதிய மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை உறுப்பினர்களை முடிவு செய்வதாக இருந்தால், தமிழ்நாட்டுக்கு இப்போதுள்ள 39 மக்களவை உறுப்பினர்கள் என்பது 30 ஆகக் குறையும். மறுபுறம், உத்திரப்பிரதேசத்தின் எண்ணிக்கை 80 இலிருந்து 91 ஆக உயரும். பீகாரின் உறுப்பினர் எண்ணிக்கை 40 லிருந்து 50 ஆக உயரும். இவ்வாறு இந்தி மாநில உறுப்பி்னர்களின் எண்ணிக்கை 225 லிருந்து 259 ஆக உயரும்!

புதிய மக்கள்தொகை அடிப்படையில் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 848 ஆக உயர்த்தி சீரமைக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது (மிலன் வைஷ்ணவ் மற்றும் ஜே. கிங்ஸ்ட்டன் – 2019).

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பி்னர்களின் எண்ணிக்கை 39 லிருந்து 49 ஆக உயரும். அதே நேரம், உத்திரப்பிரதேசத்தின் 80 என்ற எண்ணிக்கை 143 ஆக உயரும். பீகாருக்கு 40 லிருந்து 79 ஆக உயரும். இவ்வாறு, இந்தி மாநிலங்களுக்கு 408 உறுப்பினர்கள் கிடைப்பார்கள்!

ஜனநாயக முத்திரையோடு `பெரும்பான்மைவாதம்’

ஏற்கெனவே, தமிழ்நாடு தற்போதைய நாடாளுமன்றத்தில் 39 என மிகச் சிறுபான்மையாக இருக்கிறது. இந்திய அரசின் திட்டப்படி மாற்றியமைக்கப்பட்டால், தமிழ்நாட்டின் குரல் முற்றிலும் ஒடுக்கப்படும். இந்தி மாநிலங்களின் விருப்பங்கள் மிக எளிதில் பெரும்பான்மை பலம் பெற்று சட்டதிட்டங்களாக வெளிவரும். இவ்வாறாக பெரும்பான்மைவாதம் (majoritarianism) சனநாயக முத்திரையோடு செயல்படும்.

இச்சிக்கல் குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில், இப்போதுள்ள எண்ணிக்கையே 2056 ஆம் ஆண்டுவரை தொடர வேண்டும் அல்லது தமிழ்நாட்டின் உறுப்பினர் எண்ணிக்கை தற்போதுள்ள 7.18 என்ற விழுக்காட்டிலேயே தொடர வேண்டும் எனத் தீர்மானம் இயற்றியுள்ளது.

இப்போதுள்ள விகிதமே தொடர்வது என்றாலும், இந்தி மாநிலங்களின் மேலாதிக்கம் கூடுதல் எண்ணிக்கை வலுவோடு தொடரவே செய்யும்.

அனைத்துக் கட்சி கூட்டம்

மக்கள் தொகை Vs வாக்காளர்கள் தொகை

வேறு சில அறிஞர்கள் (பங்கஜ்குமார் பட்டேல் மற்றும் டி.வி சேகர் – 11-11-2024) மக்கள்தொகைக்குப் பதிலாக வாக்காளர்தொகை அடிப்படையில் மக்களவை உறுப்பினர்களைத் தீர்மானிக்கலாம் என்று இதற்குத் தீர்வு கூறுகிறார்கள். வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் தொகுதிகளை வரையறுத்தாலும், உத்திரப்பிரதேசத்தின் எண்ணிக்கை 80 லிருந்து 117 ஆகும், பீகாருக்கு 40 உறுப்பினர் என்பது 60 ஆக உயரும். இராசஸ்தானின் 25 உறுப்பினர் எண்ணிக்கை 41 ஆகும். இவ்வாறு இந்தி மாநிலங்களின் எண்ணிக்கை 225 லிருந்து 378 ஆகும். அப்போது தமிழ்நாட்டின் எண்ணிக்கை 39 லிருந்து 43 ஆகும் அவ்வளவுதான். இதுவும் இந்தி இன மேலாதிக்கத்திற்கு வலுசேர்க்கவே பயன்படும்.

நாங்கள் முன்வைக்கும் தீர்வு

இதற்குத் தீர்வாக இந்தியாவின் ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, சராசரி வாக்காளர் எண்ணிக்கை ஒரு தொகுதிக்கு 10 இலட்சம் பேராக இருக்கலாம் என்ற வகையில் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை வரையறுத்துக் கொள்ளலாம்.

அதில் ஏற்கெனவே 60 இலட்சம் மக்கள் தொகைக்கும் குறைவாக உள்ள சிறிய மாநிலங்களுக்கு மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு உள்ள 41 இடங்களை அப்படியே ஒதுக்கிவைத்துவிட்டு, மீதமுள்ள இடங்களை அனைத்து மொழி இன மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையில் பிரித்துவிடாலாம்.

ஏனெனில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி இந்தியா என்பது “மாநிலங்களின் ஒன்றியம்” (Union of States) ஆகும். 1956 ஆம் ஆண்டு மாநில சீரமைப்புச் சட்டத்திற்குப் பிறகு, மாநிலங்கள் என்பவை வெறும் நிர்வாகப் பிரிவுகள் அல்ல. அவை மொழி இன தாயகங்களாகும். அதாவது, இந்தியா என்பது மொழி இன மாநிலங்களின் ஒன்றியமாகும்.

இந்திய வரைப்படம்

தமிழினத்திற்கு தமிழ்நாடு, மலையாள இனத்திற்கு கேரளம், குசராத்தி மொழி இனத்திற்கு குசராத், மராட்டிய மொழி இனத்திற்கு மகாராட்டிரம் என்று மொழி இன தாயகங்கள் மாநிலங்களாகச் சீரமைக்கப்பட்டதைக் கவனிக்க வேண்டும்.

போஜ்புரி, மைத்திலி, கோசாலி, மகதி, ராசஸ்தானி முதலிய பல்வேறு மொழிஇனங்கள் தங்களுக்குள் யாருக்கும் தாய்மொழியாக இல்லாத இந்தி மொழியைப் பொதுமொழியாக ஏற்றுக் கொண்டு இனமாக ஒருங்கிணைந்து கொண்டிருக்கின்றனர் .இதனால்தான், இந்தி மொழி இனத்திற்குப் பத்து மாநிலங்கள் அமைந்திருக்கின்றன.

எப்போது மொழிஇன தாயகங்கள் மாநிலங்களாகச் சீரமைக்கப்பட்டதோ, அப்போதே இந்தியா என்பது மொழி இன மாநிலங்களின் ஒன்றியம் என்றாகிவிட்டது.

ஆனால், நாடாளுமன்ற மக்களவை இந்தப் புறநிலையை வெளிப்படுத்தவில்லை. 1950 சனவரி 26 அன்று இந்திய அரசமைப்புச் சட்டம் செயலுக்கு வந்து, அதனடிப்படையில் 1952-இல் நாடாளுமன்ற மக்களவை அமைக்கப்பட்டபோது, மாநிலங்கள் என்பவை வெறும் நிர்வாக பிரிவாக (Administrative unit) மட்டுமே இருந்தன.

மொழிவழி மாநிலங்களுக்கான போராட்டம் நடந்து அவற்றின் விளைவாக 1956-இல் பல்வேறு மொழி இனங்களுக்கான வரலாற்றுத் தாயகங்கள் (historical homelands) மாநிலங்களாகச் சீரமைக்கப்பட்டபின் இந்திய ஒன்றியம் என்பது மொழி இன தாயகங்களின் ஒன்றியமாக மறுவடிவம் பெற்றுவிட்டது.

அதாவது, `மொழிஇன மாநிலங்கள் என்ற செங்கற்களின் ஒழுங்கமைந்த தொகுப்பே இந்திய ஒன்றியம்’ என்ற கட்டடமாகியிருக்கிறது என்று பொருள். மொழிஇன மாநிலங்கள் இல்லாமல் இந்திய ஒன்றியம் இல்லை. அதற்கேற்ப இந்திய அரசமைப்பை அப்போதே மொழிஇனத் தாயகங்களின் சமநிலை ஆவணமாக மாற்றியமைத்திருக்க வேண்டும்.

அது நடைபெறாததால்தான் பல்வேறு பகுதிகளில் தனிநாட்டு கோரிக்கைகளும் மாநில தன்னாட்சிக் கோரிக்கைகளும் எழுந்தன.

அரசியல் களத்தில் அனைத்திந்திய கட்சிகள் சிறுத்து மாநிலக் கட்சிகள் புதிதுபுதிதாகத் தோன்றியதென்பது பல்வேறு மொழிஇன பண்பாட்டு சமூகங்களின் நிறைவேறாத விழைவுகளின் வெளிப்பாடே ஆகும்.

அதன் கொதிநிலை வெளிப்பாடாகத்தான் தற்போது மக்களவை மறுசீரமைப்பை ஒட்டி தமிழ்நாட்டிலும், தென்மாநிலங்களிலும் எழுந்துள்ள கொந்தளிப்பு.

இது, கட்சிகள் கூட்டணிகள் என்பதைத்தாண்டி, பல்வேறு மொழிஇன மக்களின் உண்மையான சிக்கல் என்பதை இந்திய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரசு உள்ளிட்ட அனைத்திந்திய கட்சிகளும் இந்த மெய்நிலையை உணர்ந்து தீர்வுகளைத் தேட வேண்டும்.

நாடாளுமன்றம்

இந்தியா போன்ற பல்வேறு தனித்தனி வரலாறு கொண்ட மொழிஇன மக்கள் வாழும் நாட்டில் இனச் சமநிலைப் பாதுகாப்புதான் சனநாயகத்தை அதன் உண்மையாக பொருளில் நிலைநிறுத்தும். ஏதோ ஒரு மொழிஇனம் தனது எண்ணிக்கை வலுவை வைத்து சனநாயகம் என்ற பெயரால் பெரும்பான்மை வாதத்தைச் செயல்படுத்தி தங்கள் முடிவுகளை பிறர்மீது திணிக்க முயன்றால், அங்கே சனநாயகமும் நிலைக்காது, அந்த நாட்டின் ஒற்றுமையும் சீர்குலையும்.

எனவே, வெறும் மக்கள் தொகை அடிப்படையில் மீண்டும் மீண்டும் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதை விட்டுவிட்டு, அனைத்து மொழி இனங்களுக்கும் சம எண்ணிக்கையில் இடங்கள் வழங்கி நாடாளுமன்ற மக்களவையை மறுசீரமைக்க வேண்டும்.

கூட்டாட்சி அரசு – Federal Government

இந்தியா என்ற கட்டமைப்பே பிரித்தானிய பீரங்கிகளால் பல்வேறு மொழிஇனங்களின் வரலாற்றுத் தாயகங்கள் கட்டாயமாக ஒருங்கிணைத்து உருவான ஆட்சிப்பகுதி.

அதனால்தான், இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் வந்த 1946 ஆம் ஆண்டிலேயே, இந்தியாவின் பல்வேறு மொழிஇனங்களுக்கு அவை தனித்தனி நாடுகளாக இருந்தால், என்னென்ன உரிமைகளும் அதிகாரங்களும் இருக்குமோ அவையெல்லாம் வழங்கப்பட்டு, கூட்டாட்சி அரசுக்கு (Federal Government) அனைத்திந்திய தன்மை வாய்ந்த, மிகச்சில முக்கிய அதிகாரங்கள் மட்டுமே அளிக்கப்படும் என காந்தியடிகளும் காங்கிரசுக் கட்சியும் வாக்குறுதி அளித்தார்கள். அதன்படி, நாட்டுப் பாதுகாப்பு, பணம் அச்சடித்தல், வெளிஉறவு, அனைத்திந்திய தகவல்தொடர்பு ஆகியவை மட்டுமே இந்திய கூட்டாட்சி அரசிடம் இருக்கும். பிற அனைத்து அதிகாரங்களும் மாநிலங்களுக்கே இருக்கும் என உறுதியளிக்கப்பட்டது.

Representational Image

அது மட்டுமின்றி, 1920 களிலிருந்தே சுதந்திரம் பெற்ற இந்தியா மொழிவழி மாநிலங்களாக மறுசீரமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் காங்கிரசு மாநாடுகளில் மீண்டும் மீண்டும் தீர்மானங்களாக வடிக்கப்பட்டன.

பாகிஸ்தான் உருவாக்கம் காந்தியடிகள் படுகொலை வடஇந்தியாவில் இந்து முசுலிம் கலவரம் என்ற பதட்டமான சூழலில், இந்திய அரசமைப்புச் சட்டம் தோற்றத்தில் கூட்டாட்சி போன்று இருக்கும் ஒற்றையாட்சியாக உருவாக்கப்பட்டது. அப்போதே, மாநிலங்களுக்கான உரிமைக்குரல், இந்திய அரசமைப்பு அவையில் உரக்க ஒலித்ததையும் பார்க்க முடியும்.

இன்று, ஆளுநர் – மாநில ஆட்சி முரண்பாடு, நிதிப்பங்கீட்டில் மாநிலங்கள் புறக்கணிப்பு என்ற கூக்குரல், மாநில அதிகாரங்கள் பறிப்பு என்ற கொந்தளிப்பு, அதற்கு மேல் மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை சீரமைப்பு என்ற சிக்கல் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டால், உண்மையான மொழிஇனமக்களின் இறையாண்மை பகிர்வாக (Sharing of Sovereinty) இந்திய அரசமைப்பு அமைய வேண்டும் என்பது புரியும்.

எனவே, அனைத்து மொழிஇன மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கை உள்ள அவையாக நாடாளுமன்ற மக்களவையை மாற்றி அமைப்பதுடன், மேற்சொன்ன நான்கு அதிகாரங்கள் தவிர, பிற அனைத்து அதிகாரங்களும் மாநிலங்களுக்கே வழங்கப்பட்டு, உண்மையான கூட்டாட்சியாக இந்திய அரசமைப்பை மாற்றி அமைக்க வேண்டும்.

அவ்வாறான சூழலில், நாடாளுமன்றத்திற்கு தனியே மாநிலங்களவை என ஒன்று தேவையில்லை.!

நாளை : களம் பகுதி 2 : `ஒரு வாக்கு, ஒரு மதிப்பு: எதிர்காலம் காக்க இணைந்து நிற்போம்! – இரா.சிந்தன்

(தொடரும்..!)

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மல்ஹர் சர்டிஃபிகேட்: இந்துக்கள் மட்டும் நடத்தும் மட்டன் கடை – திறந்துவைத்த மகாராஷ்டிரா அமைச்சர்

மட்டன் கடைகளில் விலங்குகளை வெட்டும்போது முஸ்லிம்கள் ஹலால் முறையைப் பின்பற்றுவது வழக்கமாக...

`தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா… உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்!' – ஸ்டாலின் காட்டம்

மத்திய அரசு, தமிழ்நாட்டில் அமலுக்குக் கொண்டுவரத் தீவிரம் காட்டி வரும் 'தேசியக்...