தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து விட்ட சூழலில் பதிவான அதிக வாக்கு சதவிகிதத்தால் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் மே 4 ம் தேதியை திக் திக் மனநிலையுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றன. முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட சில தலைவர்களோ மனநிலையைக் கொஞ்சம் கூல் ஆக்கிக் கொள்ள மலைப் பிரதேசங்களுக்குக் கிளம்பி விட்டனர்.
இந்தப் பின்னணியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவோ சொந்த ஊர் பக்கம் விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்திருக்கிறார்.
கலிங்கப்பட்டி அருகேயுள்ள வீரணாபுரம் கிராம மக்கள் தங்கள் ஊருக்கு ஒரு விநாயகர் கோயில் வேண்டுமென வைகோவிடம் கோரிக்கை வைத்திருந்தார்களாம்.
அதை ஏற்றுக்கொண்ட வைகோ தனது சொந்தச் செலவில் அந்த கிராமத்தின் மையப் பகுதியில் ‘வீரசக்தி விநாயகர்’ என பெயரிடப்பட்ட அந்தக் கோயிலைக் கட்டித் தந்துள்ளார்.
கோவிலின் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது.
வைகோ கலந்து கொண்டு கலசத்தில் நீர் ஊற்றினார். தொடர்ந்து இதே ஊரின் எல்லையில் கோயில் கொண்டுள்ள வீரகாளி கோயில் குடமுழுக்கு நிகழ்விலும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து தமது ஏற்பாட்டில் ஊர் மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் வைகோ தொடங்கி வைத்தார்.

முன்னதாக வீரணாபுரம் கிராமத்திற்கு வந்த வைகோவை மேள தாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்து ஊர் மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
நிகழ்ச்சியில் உள்ளூர் மதிமுகவினருடன் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் திரளாக கலந்துகொண்டனர்.




