பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாகவும், பெரிய விமான நிலையம் சென்னைக்கு இப்போது எவ்வளவு அவசியம் என்பது குறித்தும் இன்று சதுப்புநிலப் பாதுகாப்பு பற்றி சென்னையில் பேசுகையில் தெரிவித்திருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி.
அவர் பேசுகையில், “தமிழக சட்டமன்றத்தின் சூப்பர் ஸ்டார் சௌமியா அன்புமணி” எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசியவர், “ஒரு சிறந்த சர்வதேச விமான நிலையத்திற்கு இரண்டு ஓடுதளங்களும் ஒன்றுக்கொன்று இணையாக இருக்க வேண்டும். ஆனால் சென்னை ஏர்போர்ட்டில் இரண்டு ரன்வேக்கள் செங்குத்தாக (Perpendicular) இருக்கின்றன.
இதனால் இரண்டு ரன்வேக்கள் இருந்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாது. இந்த ஏர்போர்ட் ரன்வே அடையாற்றின் மேலே 200 தூண்கள் எழுப்பி கட்டப்பட்டிருக்கிறது.
அடையாற்றில் வெள்ளம் வந்தால், அந்தத் தூண்களை அடைத்துக்கொண்டு தண்ணீர் நேராக ஏர்போர்ட்டிற்குள் நுழைந்துவிடுகிறது. ஒரு சின்ன மழை பெய்தாலே தண்ணீர் நிற்கிறது. இதனால் விமானங்கள், வாகனங்கள் பாதிக்கப்பட்டு 2-3 நாட்கள் ஏர்போர்ட்டையே மூட வேண்டிய நிலை வருகிறது.
A380, போயிங் 777 போன்ற பிரமாண்டமான சர்வதேச விமானங்கள் இறங்குவதற்கு ரன்வே 60 மீட்டர் அகலமும், போதுமான நீளமும், இரட்டை ஏரோபிரிட்ஜ் வசதியும் தேவை. ஆனால் இங்கு 45 மீட்டர் அகலம்தான் இருக்கிறது.
அதனால்தான் A380 போன்ற பெரிய விமானங்கள் பெங்களூருக்குப் போகின்றனவே தவிர சென்னைக்கு வர முடிவதில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குச் சர்வதேச சரக்குப் போக்குவரத்து மிக முக்கியம்.
1999–2000 காலகட்டத்திலேயே சென்னைக்கு ஒரு புதிய ஏர்போர்ட் வேண்டும் என்று சொன்னோம். 2007-இல் அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு, இன்றைக்கு 2026 வந்துவிட்டது!
கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகியும் நமக்கான புதிய கிரீன்ஃபீல்ட் ஏர்போர்ட் இன்னும் வரவில்லை. பரந்தூரில் விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது என்று ஒரு முடிவு எடுத்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
அதுதான் எங்களுடைய நிலைப்பாடும் கூட. அதுபோல, திருவண்ணாமலையில் சிப்காட்டிற்காக 3,000 ஏக்கர் விளையும் நிலங்களை எடுக்கக் கூடாது. கடலூர் மாவட்டம் நெய்வேலி (NLC) விரிவாக்கத்திற்காகக் காவிரி டெல்டா பகுதிக்குட்பட்ட 60,000 ஏக்கர் விளை நிலத்தை என்.எல்.சி கையகப்படுத்தத் துடிக்கிறது.
“ஒரு பிடி மண்ணைக் கூட நாங்கள் தர மாட்டோம்” என்று முதலமைச்சர் சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். சட்டமன்றத்தில் ஒரு அமைச்சர் பேசும்போது, “பரந்தூரில் ஏர்போர்ட் வராது, ஆனால் தொழிற்பேட்டை வரும்” என்று சொல்கிறார்.
ஏர்போர்ட் வந்தால் விவசாயம் அழியும், தொழிற்பேட்டை வந்தால் விவசாயம் அழியாதா? சொல்லப்போனால் தொழிற்பேட்டை தான் நிலம், நீர், காற்று மூன்றையுமே மாசுபடுத்தி விவசாயத்தை முற்றிலும் அழிக்கும்” எனப் பேசியிருக்கிறார்.




