7
July, 2026

A News 365Times Venture

7
Tuesday
July, 2026

A News 365Times Venture

”குடிக்க நல்ல தண்ணி இல்ல; சுவாசிக்க நல்ல காற்று இல்ல” – குப்பைக் கிடங்கால் புலம்பும் மக்கள்

Date:

தஞ்சாவூர் மாநகரத்தின் மையப்பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூரி பெரியகோயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் இந்தக் குப்பைக் கிடங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி குப்பைக் கிடங்கில் தீ பற்றி எரிவதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாவதாகக் கூறுகின்றனர். நகரம் விரிவடைந்து விட்டது, தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டியாக மாறி விட்டது. ஆனால் இந்தக் குப்பைக் கிடங்கால் ஏற்படும் அவலங்களுக்கு மட்டும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்று புலம்புகின்றனர்.

குப்பைக் கிடங்கு

இந்நிலையில் நேற்று மாலை திடீரென குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென எரிய அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காணப்பட்டது. செக்கடி, மேல அலங்கம், மேலவீதி, வடக்கு அலங்கம் பகுதி முழுவதும் புகை பரவியதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேறினா்.

தஞ்சாவூர் திமுக எம்.பி முரசொலி, பொறுப்பு மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் பார்வையிட்டனர். தஞ்சாவூர் தவெக எம்.எல்.ஏ விஜய் சரவணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி வாகனங்களில் தண்ணீர் நிரப்பி சென்று பீய்ச்சி அடித்தனர். டிரோன் உதவியுடன் தீயை அணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 5 மணி நேர போராட்டங்களுக்குப் பிறகு தீயை அணைத்ததாகச் சொல்கிறார்கள். இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.

அதிகாரிகள் ஆய்வு
அதிகாரிகள் ஆய்வு

இதுகுறித்து அமமுக மாநகரச்செயலாளர் ராஜேஸ்வரன் நம்மிடம், ”தஞ்சாவூர் மாநகராட்சி 19 வது வார்டில் 28 ஏக்கர் பரப்பளவில் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. மாநகரில் சேகரமாகும் குப்பைகளை இங்கு கொண்டு வந்து சேமித்து, தரம் பிரிப்பதும் வழக்கம்.

இந்தக் குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் இரண்டு முறை தீ பிடித்து எரிந்துள்ளது. இதற்கான காரணத்தை ஒரு முறை கூட கண்டுபிடிக்கவில்லை.

இந்நிலையில் தீ பிடித்து புகை பரவுவதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு முறை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது. உலக பொக்கிஷங்களில் ஒன்றான தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு அருகில் கருப்புள்ளியாக குப்பைக் கிடங்கு இருப்பது வேதனை.

தீயின் போது ஏற்படும் புகை மாசு பெரியகோயில் மீதும் படர்கிறது. குப்பை கிடங்கு உள்ள பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

தவெக எம்.எல்.ஏ விஜய் சரவணன்
தவெக எம்.எல்.ஏ விஜய் சரவணன்

அப்பகுதியில் உள்ள மேல் நிலை நீர்தேக்கத் தொட்டிக்கான போர்வெல் அமைந்துள்ள பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் மோசமாகி விட்டது. அந்தக் குடிநீர்தான் குடியிருப்புவாசிகளுக்கு விநியோகிப்படுகிறது. பயன்படுத்தவே கூடாத தண்ணீரை எதுவும் அறியாத மக்கள் குடித்து வருகின்றனர்.

கடந்த ஆட்சியில் மாநகராட்சியில் பணிபுரிந்த ஈர மனம் கொண்ட உயர் அதிகாரி ஒருவர், ‘குடிக்கவே கூடாத தண்ணீரைத்தான் மக்களுக்குக் கொடுக்கிறோம். எதவாது அசம்பாவிதம் நிகழ்வதற்குள் உடனடியாக வேறு இடத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்’ என்றுள்ளார். ஆனால் இதை அலட்சியமாகக் கடந்து சென்று விட்டனர்.

இன்னல்களைத் தவிர்ப்பதற்காக குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர், ஆணையரிடம் பல முறை மனு அளித்திருக்கிறேன். கடந்த ஆட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிலும் மனு அளித்தேன். எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை வலியுறுத்தி அப்பகுதியில் கையெழுத்து இயக்கம் நடத்தியிருக்கிறோம்.

தற்போதைய தவெக அரசாவது இதில் உரிய கவனம் செலுத்தி மாநகரத்திற்கு வெளியே மக்கள் வசிக்காத பகுதியில் குப்பைக் கிடங்கை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேஸ்வரன்
ராஜேஸ்வரன்

இதை ஆலோசித்து செயல்படுத்தவில்லை என்றால் போராட்டம் நடத்துவதற்கும் ஆயத்தமாகி வருகிறோம். அப்பகுதி மக்கள் குடிக்குறது நல்ல தண்ணியும் இல்ல, சுவாசிக்குறது சுத்தமான காற்றும் இல்ல” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

அதிகாரிகள் வட்டத்திலோ, குப்பைக் கிடங்கை வேறு இடத்தில் மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Vijay: உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய்க்கு எதிரான 4 தேர்தல் வழக்குகள் விசாரணை – என்னென்ன? | Live updates

ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து 'சமூகநீதித்துறை'தமிழ்நாடு அரசாங்கத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை 'சமூகநீதித்துறை' என்று அதிகாரப்பூர்வமாக...

"9.1 கோடி ஈரான் மக்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை; ஆனால், போருக்குக் காரணம்…" – ட்ரம்ப்

ஈரானில் வருகிற ஜூலை 9-ம் தேதி வரை உச்சத் தலைவர் அயோதுல்லா...

மதுரை: ரூ. 13,132 கோடி மதிப்புள்ள கிரானைட் வழக்கு; 13 ஆண்டுகளாக இழுபறி; குவிந்துள்ள கற்கள் | Photos

மதுரை: காதல் கோட்டை க்ளைமேக்ஸ் ரீ-கிரியேஷன்; ரீல்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டான ரயில்...