‘இந்தியா டுடே தமிழ் ரவுன்ட் டேபிள் கான்பரன்ஸில்’ பேசிய அவர் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை, பாஜகவின் முடிவெடுக்கும் முறை மற்றும் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்தார்.
“பாஜகவின் முடிவுகள் டெல்லியை மையமாகக் கொண்டவையாக மாறி வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த நிலை மாற வேண்டும்,” என்று குறிப்பிட்ட அண்ணாமலை, மாநில அளவில் உள்ள தலைவர்களுக்கு உரிய அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “உண்மையாகவே, மாநிலத் தலைவர்களுக்கு முடிவுகளை எடுப்பதற்கும், அவற்றைச் செயல்படுத்துவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.” என்றும் அவர் அழுத்தமாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் “குஜராத் மைய வளர்ச்சி மாதிரி” மாற வேண்டும் என்று விமர்சித்தார். “முக்கியமான செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்கள், வேஃபர் (wafer) தயாரிப்பு நிறுவனங்கள், 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், 2036 ஒலிம்பிக் போட்டிகள் என அனைத்தும் குஜராத் மாநிலத்திற்கே செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அகில இந்திய வளர்ச்சிக்கு இந்த குஜராத் மாதிரி ஒருபோதும் உதவாது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அனைத்து வாய்ப்புகளும் ஒரே மாநிலத்தில் குவிக்கப்படுவது சரியான வளர்ச்சி அணுகுமுறை அல்ல என்று கூறிய அவர், “இந்த நிலை மாற வேண்டும். மக்கள் இதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்,” என எச்சரித்தார். செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் போன்ற புதிய துறைகளில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு மாநிலங்கள் கடுமையாகப் போட்டியிடும் சூழலில், அண்ணாமலையின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த விவாதத்தின் போது தமிழக முதல்வர் விஜய் குறித்தும் அண்ணாமலை பேசினார். புதிய அரசுக்குச் செயல்பட உரிய அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். “முதல்வர் விஜய் மிகவும் கடினமான நிலையில் இருக்கிறார். பல்வேறு சக்திகள் அவருக்கு எதிராகச் செயல்படும் இந்த நேரத்தில், தமிழக முதல்வராக இருப்பது எளிதல்ல,” என்றார்.
விஜய்யின் முதல் 100 நாள் ஆட்சியில் ஒரு “புத்துணர்ச்சியை”க் காண முடிவதாகவும், ஊழலை ஒழிப்பதில் அவர் உண்மையான அர்ப்பணிப்புடன் இருப்பதாக நம்புவதாகவும் தெரிவித்தார். “அவருக்கு நாம் ஓராண்டு கால அவகாசம் கொடுக்க வேண்டும். அவரது தொலைநோக்குப் பார்வையைச் செயல்படுத்த உதவுவது நமது கடமை. ஒரு உண்மையான தமிழன் செய்ய வேண்டியதை நான் செய்வதால், தற்போதைக்கு விஜய்க்கு என் ஆதரவு உண்டு,” என்றும் அண்ணாமலை கூறினார்.




