‘முதியவர்களுக்கு ரூ.3000, வேலை இல்லாதவர்களுக்கு ரூ.4000 தரோம்னு சொன்னீங்க, ஆனா.!’- கேகேஎஸ் ராமசந்திரன்
சட்டமன்றத்தில் பேசிய திமுக எம்எல்ஏ கேகேஎஸ் ராமசந்திரன்,”தோட்டக்கலை சங்கம் எத்தனை ஆண்டுகாலம் மீட்க முடியாமல் இருந்தது, அதை மீட்டவர் எங்கள் தலைவர்.
சென்னையில் 77,000 பேருக்கு பட்டா வழங்கியவர் ஸ்டாலின். ஓய்வூதியம் நாங்கள் 1200 ரூபாய் கொடுத்தோம். நீங்கள் 3000 ரூபாய் கொடுப்போம் என்று சொன்னீர்கள். இந்தப் பட்ஜெட்டில் இதுகுறித்து ஏதாவது சொல்வீர்கள் என்று பார்த்தேன்…
20 ரூபாயில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் காமராஜர், அதனை 1200 ரூபாயாகக் கொண்டுவந்தவர் எங்கள் தலைவர் ஸ்டாலின். முதியவர்களுக்கு, மாற்றுத்திறனாளிக்ளுக்கு 3000 ரூபாய் தருகிறோம், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு 4000 ரூபாய் தருகிறோம் என்று சொல்லியவர்கள் நீங்கள்…
இதெல்லாம் இருக்குமா என்று பட்ஜெட்டில் தேடி தேடிப் பார்த்தோம். ஒன்றும் தெரியவில்லை. ஆனால் எங்கள் முதலமைச்சர் எதைச் சொன்னாரோ, அதையெல்லாம் சாதித்து காட்டினார்” என்று பேசினார்.
‘எந்த தீமை வந்திருந்தாலும் அது திமுக மூலம்தான் வந்திருக்கும் என எம்ஜிஆர் சொல்லியிருப்பார்.!’- சிடிஆர்
மேகமலை விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், “திமுக, அதிமுக ஆட்சியில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. புரட்சி தலைவர் எம்ஜிஆர் இதே சட்டமன்றத்தில் ‘தமிழகத்திற்கு எந்தவகையில் தீமைகள் வந்திருந்தாலும் அது தீயசக்தி திமுக மூலம் தான் வந்திருக்கும்” என்று சொல்லியிருப்பார்’. அதுதான் இந்த விவகாரத்திலும் நடந்திருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் மக்களுக்கு தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் எடுக்கப்பட்டு வருகிறது” என்று பேசியிருக்கிறார்.
திமுக வெளிநடப்பு
கோவை, திருவொற்றியூர் மாணவர்கள் கொலை தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் முறையாக இல்லை எனக் கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்துவிட்டனர்.
“இங்கு இருக்கக்கூடிய அமைச்சர் போதைப்பொருளைப் பவுடராக நுணுக்கி என்ன செய்தார் என்பதை.!”- உதயநிதி ஸ்டாலின்
சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பதை என்பதை அனைத்து கட்சி தலைவர்களும் அரசின் கவனத்திற்கு எடுத்து வந்தோம். ஆனால் இங்கு இருக்கக்கூடிய எந்த அமைச்சரும் அதற்கு சரியான பதில் சொல்லவில்லை. மாறாக உங்கள் ஆட்சியில் அது நடந்தது, இது நடந்தது என்று குறைச்சொல்லி கொண்டிருக்கிறார்கள். எங்கள் ஆட்சியில் நாங்கள் சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். ஏன் உங்கள் ஆட்சியில் நடவடிக்கை எடுப்பதில்லை என்று தான் நாங்கள் கேட்கிறோம்.

இங்கு இருக்கக்கூடிய அமைச்சர் போதைப்பொருளைப் பவுடராக நுணுக்கி என்ன செய்தார் என்பதை வீடியோ மூலம் எல்லோரும் பார்த்தார்கள். கடந்த 5 ஆண்டுகளில் எங்கள் தலைவர் ஸ்டாலின் போதைப்பொருளை ஒழிக்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகப்படியானப் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான புள்ளிவிவரங்கள் தேவைப்பட்டால் இந்த ஆட்சியில் சென்னை மாநகர கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கும் திரு. அமல்ராஜ் ஐபிஎஸிடம் கேட்டால் தெரியும்” என்றார்.
“அமைச்சர் ஆதவ் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறேன்”- சபாநாயகர்
ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் திமுக குறித்து பேச ஆரம்பித்தப்போது அக்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு ஆதவ் அர்ஜுனா, ” எதிர்கட்சியில் 57 பேர் தான் இருக்கிறீர்கள். எதிர்கட்சி தலைவர் பேசும்போது நாங்கள் எழுந்தோம் என்றால்…” என்று கூற சபாநாயகர் பொதுப்பணித்துறை அமைச்சர் கருத்தை ஏற்க முடியாது. நீங்கள் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என்றார்.
” ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதே பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது”- உதயநிதி ஸ்டாலின்
தமிழக சட்டமன்றத்தில் இன்று சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ” கோவையில் கல்லூரி மாணவனை 20 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்; இது கோஷ்டி மோதல் அல்ல.

போதைப்பொருள் கும்பல் குறித்து காவல் துறையிடம் தகவல் கொடுத்ததால் அமுதன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலை அரசின் அலட்சியத்தால், போலீஸின் பொறுப்பற்ற போக்கால் தான் நடந்தது. போதை கலாசாரத்தை எதிர்த்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு எச்சரிக்கை சம்பவமாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், ” ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதே பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது. 100 நாள் சாதனை என அரசு பெருமை பேசும் வேளையில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நடந்து வருவதே சாட்சி. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை சரிசெய்ய போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.




