தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் VB-GRAM (G) Scheme 2025 திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான புதிய நடைமுறைகளை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் வட்டார அதிகாரிகளுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் விரிவான வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளார்.
புதிய வழிகாட்டுதலின்படி, உடல் உழைப்பை மேற்கொள்ளும் திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் முட்புதர்கள் அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், மண்மூடுதல், நீர்பாய்ச்சுதல், மண்வரப்பு அமைத்தல், கல்வரப்பு அமைத்தல் மற்றும் அகழி அமைத்தல் (Trench Cutting) உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணித்தளத்தில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அவர்களுக்கு இந்த சிறப்புப் பணிகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில், மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் மட்டுமே மண் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தலாம். அப்போது அவர்கள் 5 அல்லது 10 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, சாதாரண தொழிலாளர்கள் மேற்கொள்ளும் பணியின் 50 சதவீத அளவு மட்டுமே முன்கூட்டியே அளவீடு செய்து ஒதுக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மண் தொடர்பான பணிகளை நான்கு மணி நேரம் மட்டும் செய்தாலே போதுமானது என்றும், ஒதுக்கப்பட்டுள்ள 50 சதவீத பணியை நிறைவு செய்தால் முழு நாள் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வேலை அட்டை வழங்குவதில் தாமதம் கூடாது
வேலை அட்டை கோரும் தகுதியுடைய அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் 15 நாட்களுக்குள் தனித்துவமான வேலை அட்டை வழங்கப்பட வேண்டும். வேலை கோரும் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவித நிபந்தனைகளும் விதிக்கக் கூடாது என்றும், VB-GRAM (G) திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதில் எவ்வித தொய்வும் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனி e-Muster Roll, முழு ஊதியம் உறுதி
மாற்றுத்திறனாளிகளுக்காக தனி மின்னணு வருகைப் பதிவேடு (e-Muster Roll) தயாரிக்கப்பட்டு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (MGNREGS) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆகியோரால் உறுதி செய்யப்பட வேண்டும்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 50 சதவீத பணிகள் முன்கூட்டியே அளவீடு செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும். அவர்கள் மேற்கொண்ட பணிகளின் இறுதி அளவீட்டை பணி மேற்பார்வையாளர் மேற்கொள்ள வேண்டும். முழு ஊதியம் வழங்கப்படுவதை FTO (Fund Transfer Order) தயாரிக்கும் கட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாதந்தோறும் குறைகேள் முகாம்
மாற்றுத்திறனாளிகளின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தலைமையில் குறைகேள் முகாம் நடத்தப்பட வேண்டும். மேலும், இரு மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட அளவில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அல்லது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தலைமையில் சிறப்பு குறைகேள் முகாம் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகள் அனைத்தும் ஊராட்சி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளால் முறையாக கண்காணிக்கப்பட்டு, VB-GRAM (G) Scheme 2025 திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித தடையுமின்றி முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை உத்தரவிட்டுள்ளது.




