திமுக, அதிமுகவை விட, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
நேற்றைய தினம், தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க ஆளுநர் முட்டுக்கட்டைப் போடுகிறார். பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பேன் என ஆளுநர் முரண்டு பிடிப்பதற்கும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இப்படியாக அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது. இந்நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான கட்சிகளின் ஆதரவு பற்றி சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.
சி.டி. ஆர். நிர்மல் குமார், “சட்டப்படி தனிபெருங்கட்சிக்கு ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்புவிடுக்க வேண்டும். மக்கள், தவெகவிற்கு வாக்களித்திருக்கிறார்கள். அவர் கண்டிப்பாக அணுக வேண்டும். நாங்களாகவே சென்று கொடுத்திருக்கிறோம். ஒரு நாள் காத்திருப்போம்” என்றவர், “விசிக, சிபிஐ, சிபிஐ(எம்) ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்டிருக்கிறோம். அவர்களும் அதை அலோசித்துவிட்டு முடிவைச் சொல்லுவார்கள். ஐ.யு.எம்.எல் கட்சிக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். நேரிலும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

என்.டி.ஏ கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பவில்லை. அதற்கான எண்ணமும் இல்லை. அட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என எங்களுடைய தலைவர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு இருந்தால்தான் அவர்களுடைய கொள்கையையும் அவர்களால் நிறைவேற்ற முடியும்.
தவெக-விற்கு இப்போது நெருக்கடியும் இல்லை. கான்வே பாதுகாப்பு கொடுக்கப்படுவதனால், மக்களுக்குத் தேவையில்லாத இடையூறுகள். எங்களுடைய தலைவர்தான் அதனை வேண்டாம் என சொன்னார்” என்றார்.




