தமிழக அரசியலுக்கும் திரைப்படத் துறைக்கும் இடையிலான தொடர்பு என்பது இந்திய அளவிலேயே தனித்துவமானது. அண்ணாதுரை, கருணாநிதி போன்ற தலைவர்கள் தங்கள் பேனாவின் மூலம் அரசியலைத் தீர்மானித்தார்கள் என்றால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் தங்கள் திரைப் பிம்பத்தின் மூலம் மக்கள் செல்வாக்கைப் பெற்றனர்.
அந்த வரிசையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் படைத்திருக்கும் சாதனை, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளது.
தன்னுடைய ஆதர்ச நாயகனான எம்.ஜி.ஆரின் சாதனையை முறியடித்து, நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றவர் என்ற வரலாற்றுச் சாதனையை விஜய் தன்வசப்படுத்தியுள்ளார்.
வாக்கு வங்கிச் சரித்திரம்: ஓர் ஒப்பீடு!
நடிகர்களாக இருந்து புதிய கட்சியைத் தொடங்கி, தங்கள் முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட தலைவர்களின் வாக்கு சதவீதங்களை ஒப்பிடுகையில் விஜய்யின் எழுச்சி மலைக்க வைக்கிறது:
எம்.ஜி.ஆர் (அதிமுக – 1977): திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆர், 1977-ல் நடந்த தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் 33.52% வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தார்.
விஜயகாந்த் (தேமுதிக – 2006): `கருப்பு எம்.ஜி.ஆர்’ என அழைக்கப்பட்ட விஜயகாந்த், இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக 2006-ல் தனித்துப் போட்டியிட்டு 8.38% வாக்குகளைப் பெற்றார்.
கமல்ஹாசன் (மநீம – 2021): மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட கமல்ஹாசன் 2.52% வாக்குகளைப் பெற்றார்.
விஜய் (தவெக – 2026): இந்த அனைத்துப் புள்ளிவிவரங்களையும் தவிடுபொடியாக்கி, 1977-ல் எம்.ஜி.ஆர் பெற்ற 33.52% வாக்குகளைத் தாண்டி விஜய் பெரும் சரித்திர வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
விஜய்யின் வெற்றிக்குக் கைகொடுத்த சினிமா பிம்பம்
விஜய்யின் இந்தப் பிரமாண்ட வெற்றிக்கு அவரது சினிமா பிம்பம் மிக நேர்த்தியாகவும், திட்டமிடப்பட்ட வகையிலும் உதவியது. ஆரம்பகாலங்களில் காதல் நாயகனாக வலம்வந்த விஜய், பின்னாட்களில் தன் படங்களின் கதைகளை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்தார்.
கத்தி (விவசாயிகள் பிரச்சனை), மெர்சல் (மருத்துவத் துறை ஊழல்), சர்கார் (கள்ள ஓட்டு மற்றும் அரசியல் விழிப்புணர்வு) போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு பொழுதுபோக்கு நாயகன் என்ற நிலையிலிருந்து, சினிமாக்களில் மக்களுக்காகக் குரல்கொடுக்கும் சமூகப் போராளியாக மாற்றி நிலைநிறுத்தின.

‘தளபதி’ பட்டமும் அண்ணன் உறவும்:
தலைவர் என்ற பிம்பத்தை விட, `தளபதி’, `அண்ணா’ என்ற பிம்பமே அவரை இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் நெருக்கமாக்கியது. பெண்கள் மத்தியில் ஒரு நிலையான வாக்கு வங்கியை உருவாக்க உதவியது. சினிமா புகழைத் தாண்டி, தனது ரசிகர் மன்றங்களை ‘விஜய் மக்கள் இயக்கம்’ என மாற்றி, பல ஆண்டுகளாக விலையில்லா உணவகங்கள், ரத்த தான முகாம்கள், கண் தான முகாம்கள் எனத் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபடுத்தியது அவரது திரைப் பிம்பத்தை நிஜ வாழ்க்கையின் நம்பிக்கையாக மாற்றியது.
எம்.ஜி.ஆருக்குக் கிடைக்காதது, விஜய்க்குக் கிடைத்தது என்ன?
எம்.ஜி.ஆர் மிகப்பெரிய ஆளுமை என்றாலும், விஜய்யின் இந்த அபரிமிதமான வெற்றிக்கு எம்.ஜி.ஆரின் காலகட்டத்தில் இல்லாத சில பிரத்யேகக் காரணிகளும், விஜய்க்குக் கிடைத்த சில தனித்துவமான பலங்களும் வெற்றிக்கு உதவின.
-
எம்.ஜி.ஆர் தனது கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பத்திரிகைகளையும், திரைப்படங்களையும், நேரடிப் பிரசாரங்களையுமே நம்பியிருந்தார். ஆனால் விஜய்க்கு சமூக வலைத்தளங்கள் என்ற பிரமாண்டமான ஆயுதம் கிடைத்தது.
ஒரு அறிக்கை அல்லது ஒரு வீடியோ வெளியான அடுத்த நொடியே, அது தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் உள்ள பல கோடி மொபைல் திரைகளைச் சென்றடைந்தது.

-
1977-ல் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தபோது, காமராஜரின் மறைவுக்குப் பின் திமுகவிற்கு ஒரு வலுவான மாற்று தேவைப்பட்டது. ஆனால் 2026-ல் விஜய் வந்தபோது, கடந்த 50 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக என இரு திராவிடக் கட்சிகளால் மட்டுமே ஆளப்பட்டு வந்த தமிழகத்தில், ஒரு புதிய மாற்று தேவை என்ற ஏக்கம் சில இளைஞர்களுக்கு இருந்தது.
-
எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்குவதற்கு முன், அவர் பல ஆண்டுகள் திமுகவின் பொருளாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். அண்ணாதுரையால் நேரடியாக வளர்க்கப்பட்டவர். அவருக்கு என்று ஒரு அரசியல் வாக்கு வங்கி திமுகவிற்குள்ளேயே இருந்தது. ஆனால் விஜய், எந்தவொரு அரசியல் கட்சியின் பின்புலமும் இல்லாமல், சுயமாகத் தனது ரசிகர்களைத் தொண்டர்களாக மாற்றி இந்த வெற்றியைச் சாதித்துள்ளார்.
-
அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே, 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கியதும், “படியுங்கள், ஆனால் பெரியார், அம்பேத்கர், காமராஜரைப் படியுங்கள்” என்று அவர் கூறியதும் முதல் தலைமுறை வாக்காளர்களை அப்படியே தவெக பக்கம் திருப்பியது.

வலுவான திரைப்பிம்பம், இளைஞர்களின் நாடித் துடிப்பைப் புரிந்துகொண்ட அரசியல் வியூகம் ஆகியவற்றின் மூலம் `வாத்தியாரை’ மிஞ்சிய `மாணவன்’ என்று விஜய் அதனை நிரூபித்துள்ளார்.




