சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள், ‘கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3,16,000 க்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், பால் கொள்முதல் விலையை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்தி அறிவித்தோம்.
தவிடு, புண்ணாக்கு போன்ற இடுபொருட்களின் விலையை உயர்வை சுட்டிக்காட்டி கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி தருமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலித்து மேலும் 3 ரூபாயை உயர்த்தி வழங்க முடிவு செய்திருக்கிறோம்.
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 33 ஆயிரத்து 66 கோடி ரூபாய் அளவில் செயல்படுத்தப்பட உள்ளது.
196 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின்பாதைகள் அமைக்கப்படும்.
ஏற்கனவே உள்ள மின்பாதைகள் வலுப்படுத்தப்படும்.
தூத்துக்குடியில் 20,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1600 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்படும்.
175 கோடி ரூபாய் செலவில் செமி கண்டக்டர் உற்பத்தி பூங்கா சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும். இதன் மூலம் 2000 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 5000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
400 கோடி ரூபாய் செலவில் கோவையில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும்.
திருச்சியில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைக்கப்படும்.’ என்றார்.




