மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.
தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதியான இத்திட்டத்தில், மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளதால், முந்தைய தி.மு.க அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது. இதன் விளைவாக, தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் ரூ. 3,500 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது, இது பள்ளிக் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தேக்கநிலையை ஏற்படுத்தியது.
தற்போது தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு அமைய உள்ள சூழலில், நிறுத்தி வைக்கப்பட்ட நிதியைப் பெறவும், திட்டத்தை அமல்படுத்தவும் ஏதுவாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது புதிய கல்விக் கொள்கையை ஏற்பதற்கும், மும்மொழிக் கொள்கையை அனுமதிப்பதற்கான ஒரு நிபந்தனையாகப் பார்க்கப்படுகிறது.
அதனால், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இத்திட்டத்தில் கையெழுத்திடாமல், மத்திய அரசை எதிர்த்து வந்தன. அதன் காரணமாக, ‘சமக்ர சிக்ஷா அபியான்’ (Samagra Shiksha Abhiyan) திட்டத்திற்கான நிதி நிறுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசு இத்திட்டத்தை நிதியுடன் இணைத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இது தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டி வருகின்றன.

எனவே, மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அங்கு இத்திட்டம் தொடர்பாக சாதகமான நகர்வுகள் இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். அதேபோல தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி அமைக்கவிருக்கும் தவெக அரசின் முடிவு என்ன என்பது இதுவரை தெரியவில்லை. கல்விக்கொள்கை குறித்த புதிய அரசின் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




