OSM குளறுபடி: சி.பி.எஸ்.இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடி மாற்றம்!
சிபிஎஸ்இ (CBSE) ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) மதிப்பீட்டு முறையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் டிஜிட்டல் போர்ட்டலில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக எழுந்த புகார்களை அடுத்து, மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதன் பின்னணியில், சிபிஎஸ்இ அமைப்பில் பெரிய அளவிலான உள்விவகார விசாரணை மற்றும் சீரமைப்பு நடவடிக்கையாக, சிபிஎஸ்இ தலைவர் (Chairman) மற்றும் செயலாளர் (Secretary) ஆகிய இருவரையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் முகாமிட்ட அண்ணாமலை; நயினாரை அழைக்கும் அமித் ஷா!
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உடனடியாக டெல்லி வருமாறு கட்சித் தலைமை அழைப்பு விடுத்திருக்கிறது. இன்றிரவு, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அமித் ஷாவை அண்ணாமலை சந்தித்துப் பேசிய நிலையில், இத்தகைய அழைப்பை விடுத்திருக்கிறது பாஜக.
அண்ணாமலை பாஜக-விலிருந்து விலகல்!
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சமீப காலமாக கட்சியின் மாநிலத் தலைமை மீது மிகுந்த அதிருப்தியில் இருந்து வருவதாகப் பேசப்பட்டு வந்தது. அதற்கேற்றாற்போல அண்ணாமலையும் சற்றே கட்சியிடமிருந்து விலகியே காணப்பட்டார். பாஜக தேசிய தலைவர் நிதின் நபினிடம் தமிழ்நாடு பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடிதம் அளித்திருந்தார், அண்ணாமலை. அவர் கட்சி தொடங்கப் போவதாக அரசியல் அரங்கில் பரபரக்கப்பட்டு வரும் சூழலில், நேற்றைய தினம், `இன்னும் இரு தினங்களில் முடிவை அறிவிப்பேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், அண்ணாமலை தற்போது பாஜக-விலிருந்து விலகி இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்று ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், பாஜகவின் டெல்லி தலைமையோ, இப்போது வரை மாநிலத்தின் முன்னாள் தலைவர் அண்ணாமலையைக் கண்டுகொள்ளாமல் டீலில் விட்டிருந்தது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கோவை தெற்கு தொகுதியைக் கேட்டார் அண்ணாமலை. ஆனால், அந்தத் தொகுதி வானதி சீனிவாசனுக்கு சென்றுவிட்டது.
வேறு தொகுதிகள் ஆப்ஷன் கொடுத்தும், அண்ணாமலை அவற்றைத் தவிர்த்துவிட்டார். ஆனால், தலைமை கேட்டுக்கொண்டதற்காக மட்டும் தேர்தல் பிரசாரம் செய்தார்.
ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பின், அண்ணாமலை ஆக்டிவாக இல்லாமல் சைலண்ட் மோடில் இருந்தார்.
இந்த நிலையில் தான், வருகிற ஜூன் 4-ம் தேதி (அன்று அண்ணாமலை பிறந்த நாள்), அண்ணாமலை கட்சி ஆரம்பிக்கிறார் என்கிற தகவல்கள் பரவின.

சரியாக அந்த நேரத்தில் டெல்லிக்குப் பறந்தார் அண்ணாமலை. பாஜக தலைவர்களை சந்தித்த அவர், இன்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் செயலாளர் பி.எல்.சந்தோஷை சந்தித்தார்.
NDTV பகிர்ந்துள்ள தகவலின் படி, “அண்ணாமலை சமூகமாக கட்சியில் இருந்து விலகும் பிளானில் இருக்கிறாராம். ஆனால், அவரை எப்படியாவது சமாதானம் படுத்திவிட வேண்டும் என்றும் பாஜக தலைமை முயன்றிருக்கிறது.
ராஜ்ய சபா சீட் தருகிறோம் என்றெல்லாம் சொல்லிப் பார்த்திருக்கிறது பாஜக தலைமை. ஆனால், எதுவும் எடுபடவில்லையாம்.
அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்று கூறப்படுகிறது.
தலைமை செயலகத்திற்கு வெளியே புகைமூட்டம்
சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே புகைமூட்டம் உருவாகியுள்ளது.
இதனால், அந்த வழியாகப் பயணிக்கும் மக்களுக்கு கண்ணெரிச்சல், லேசான மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்பட்டுள்ளன.
தலைமை செயலகத்திற்கு சற்று அருகே தான் துறைமுகம் உள்ளது. அதனால், அங்கிருந்து இந்தப் புகைமூட்டம் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், உறுதியான காரணம் எதுவும் இன்னும் தெரியவில்லை.




விஜய் – சிதம்பரம் சந்திப்பு
கடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக – காங்கிரஸ் கூட்டணி அமையக் காரணமான முக்கியமானவர்களில் – காங்கிரஸின் சீனியர் தலைவர் ப.சிதம்பரமும் ஒருவர்.
ஆனால், தேர்தல் முடிவுக்குப் பிறகு, அரசியலில் காட்சிகளும் மாறின… கூட்டணிகளும் மாறின.
அதன் படி, தற்போது தவெக கூட்டணியிலும், தமிழ்நாடு அமைச்சரவையிலும் பிரசன்ட் ஆகியிருக்கிறது காங்கிரஸ்.
இதையொட்டி, இன்று தலைமைச் செயலகத்தில் ப.சிதம்பரம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயைச் சந்தித்துள்ளார்.


இது ஜனநாயக படுகொலை இல்லையா ?
தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு தமிழ்நாடு முதலமைச்சர் விஜயிடம் தனது எக்ஸ் பக்கப் பதிவு மூலம் கேள்வி கேட்டுள்ளார்.
“ஜாதி, மத, ஊழலை ஒழித்து விட்டதாக தம்பட்டம் அடிக்கும் முதல்வரே மயிலாப்பூர், ஸ்ரீரங்கத்தில் உங்கள் வேட்பாளர்கள் யார்? இதில் ஜாதி, மதம் இல்லையா?
திருச்சி கிழக்கு வேட்பாளராக தாங்கள் போட்டியிட்டீர்கள். இதில் மதம் இல்லையா?

தமிழ்நாடு முழுவதும் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களைப் பார்த்தாலே தெரியும். இதில் ஜாதி, மதம் துளிர்விட்டு செழித்து வளர்ந்திருப்பது தெரிகிறது.
முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஆறே நாளில் எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை புஷ்பா பட பாணியில் சோபா செட் மூலம் தன்வசப்படுத்தி பலமுறை ஆட்சியில் இருந்த கட்சியை உடைத்து 25 சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வைத்த தங்கள் செயல் ஜனநாயக படுகொலை இல்லையா ?
இதை யாரும் கேட்கக் கூடாதா? இதுதான் ஊழல் ஒழிப்பா? இது தூய எண்ணம் கொண்ட முதல்வர் செய்யும் செயலா?”







நிதின் நபின் சந்திப்பிற்குப் பிறகு, அண்ணாமலை முடிவு அறிவிப்பு?
‘புதிய கட்சி தொடங்கப் போகிறார்’ என்கிற பேச்சு எழுந்த நிலையில், தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றிருக்கிறார்.
இன்று பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் நபினை சந்திக்கவிருக்கிறார் அண்ணாமலை.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, அரசியலில் தன்னுடைய அடுத்தகட்ட நகர்வு குறித்து அண்ணாமலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவை குறை சொல்லிக்கொண்டு இருப்பதால் நீங்கள் செய்யும் தவறுகளை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்! – திமுக எம்.பி கனிமொழி
திருச்சி கிழக்கில் திருமா போட்டியா?
தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வென்ற தொகுதியான திருச்சி கிழக்கில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடலாம். அதில் வென்றால், அவர் தமிழ்நாட்டு அமைச்சரவையில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிற பேச்சுகள் எழுந்தன.
அந்தப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருமாவளவன், “100 சதவிகிதம் சொல்கிறேன். நான் எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடமாட்டேன். அதற்கான வாய்ப்பில்லை.
அதனை ஏற்கெனவே முதல்வர் விஜயிடம் கூறிவிட்டேன். அதில் எனக்கு உடன்பாடில்லை. அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லை” என்று கூறியுள்ளார்.

இன்று தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடக்கும் முக்கியமான அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இந்த Live Blog-ல் இணைந்திருங்கள்.




