தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, நீண்ட விடுப்பில் இருந்த N.முருகானந்தம், IAS மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். அவர் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக (கூடுதல் தலைமைச் செயலாளர்) நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இப்பொறுப்பை பி. அமுதா, IAS கூடுதலாகக் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வந்த M.A. சித்திக், IAS மாற்றப்பட்டு, தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பதவியில் இருந்த த. உதயச்சந்திரன், IAS-க்கு பதிலாக இவர் இந்தப் பொறுப்பை ஏற்கிறார்.
சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறையின் புதிய முதன்மைச் செயலாளராக டாக்டர் S. சுவர்ணா, IAS நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு ராஷ்டிரிய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA) திட்டத்தின் மாநில இயக்குநராகப் பணியாற்றி வந்தார். டாக்டர் கே. மணிவாசன், IAS கூடுதலாகக் கவனித்து வந்த இந்தப் பொறுப்பை டாக்டர் சுவர்ணா இனி முழுமையாகக் கவனிப்பார்.
அதேபோல், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராகப் பணியாற்றி வந்த K. நந்தகுமார், IAS சேவைகள், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் டாஸ்மாக் நிறுவனத்தின் புதிய மேலாண்மை இயக்குநராகப் பொறுப்பேற்பார். டி. கிறிஸ்துராஜ், IAS-க்குப் பதிலாக இவர் இந்த முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.




