தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக அரசியலில் மிகவும் தெளிவாக தெரியும் ஒரு மாற்றம் என்றால், அது இளைஞர்களை நோக்கிய அரசியல் நகர்வுகள்தான். தேர்தல் வெற்றிக்கு பிறகு, இளைஞர்களின் ஆதரவை பெற்றால்தான் அரசியலில் நிலைத்து நிற்க முடியும் என்ற புரிதல் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வலுத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் இரு பிரதான திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, இளைஞர்களை மீண்டும் தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.
இளைஞர்களின் எழுச்சி, சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் பாரம்பர்ய அரசியலுக்கு மாற்றாக புதிய அரசியல் கலாசாரத்தை எதிர்பார்த்த மனநிலை ஆகியவை ஒன்றிணைந்து தவெக-விற்கு பெரும் ஆதரவாக அமைந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த பின்னணியில்தான், இளைஞர்களின் ஆதரவை தவெக மட்டுமே பெற்றுள்ளது என்ற தோற்றத்தை உடைக்க திமுகவும் அதிமுகவும் களமிறங்கியுள்ளன.
அந்த வகையில், ஏற்கெனவே “GenZ DMK” என்ற பெயரில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களை மையப்படுத்திய சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களை திமுக முன்னெடுத்து வருகிறது. நேரடியாக கட்சி நிகழ்ச்சி என்ற அடையாளத்தை முன்னிறுத்தாமல், புதிய தலைமுறை வாக்காளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றன. சமூக வலைதளங்களை திறம்பட பயன்படுத்தும் இளைஞர்களை அணுகுவது, அவர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்வது மற்றும் கட்சியின் புதிய முகத்தை அவர்களிடம் கொண்டு சேர்ப்பது ஆகியவை இதன் நோக்கமாக கூறப்படுகிறது.
திமுக இந்த களத்தில் முன்கூட்டியே செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அதிமுகவும் அதே பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. “2K ADMK” என்ற தலைப்பில் கோவையில் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சி, இளைஞர்களை கட்சியுடன் இணைக்கும் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. இளம் தலைமுறையினருக்கு கட்சியில் அதிக பொறுப்புகளை வழங்குவது, அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பது மற்றும் எதிர்கால தலைமுறையை உருவாக்குவது போன்ற நோக்கங்களுடன் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இளைஞர்களை மையப்படுத்திய இந்த அரசியல் போட்டி வெளிப்படையாக ஆரோக்கியமான மாற்றமாக தோன்றினாலும், இதன் பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் குறித்து விமர்சகர்கள் வேறொரு கருத்தை முன்வைக்கின்றனர்.

தவெகவின் வெற்றியை வெறும் இளைஞர்களின் ஆதரவாக மட்டுமே பார்க்க முடியாது என்பதே அவர்களது வாதம். ஆறு தசாப்தங்களாக தமிழக அரசியலை ஆட்சி செய்துவரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய அரசியல் சக்தியை மக்கள் தேடியதன் வெளிப்பாடே அந்த தேர்தல் முடிவு என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“இளைஞர்கள் ஆதரித்ததால் தவெக வென்றது” என்ற ஒற்றை விளக்கத்திற்குள் தேர்தல் முடிவை அடக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, “ஏன் மக்கள் மாற்றத்தை விரும்பினர்?” என்ற அடிப்படை கேள்விக்கான பதிலை தேடுவதுதான் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அவசியம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
GenZ DMK, 2K ADMK போன்ற புதிய முயற்சிகள் கட்சிகளுக்கு இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்க உதவலாம். ஆனால், இளைஞர்களை மேடைகளில் அமர்த்துவது மட்டுமல்லாமல், அவர்களின் கருத்துகளுக்கு கட்சிக்குள் இடம் கொடுத்து, முடிவெடுக்கும் அமைப்புகளில் பங்கேற்க வைப்பதுதான் உண்மையான மாற்றமாக இருக்கும் என்பதும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.




