த.வெ.க செயல்பாடுகளை எதிர்கொள்ள முடியாமல் தி.மு.க திணறிவருவதாகச் சொல்லப்படும் சூழலில், சீனியர்களை வைத்து கட்சி நடத்த முடியாமல் உதயநிதி திணறுவதாக சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். அதன் பின்னணி குறித்து அறிவாலய வட்டாரங்களில் விரிவாக விசாரித்தோம்.
நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள், “எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் எந்த முடிவாக இருந்தாலும் ‘உதயாவிடம் ஒரு வார்த்தைக் கேட்டுகோங்க’ என சீனியர்களிடம் சொல்லிவருகிறார். அதன்படி முக்கிய முடிவுகளை எடுக்கும்போது உதயநிதியும் ஆர்வமாகவே இருக்கிறார். ‘இடைத்தேர்தலை புறக்கணிக்கலாம்’ என சொல்லப்பட்டபோது ‘புறக்கணிப்பத்தால் தேவையற்ற விமர்சனங்கள் வரும்… வெற்றியோ.. தோல்வியோ.. களமிறங்கிவிடுவோம்’ என முடிவெடுத்து மதுராந்தகத்தில் பரந்தாமனை களமிறக்கினார் உதயநிதி. ஆனால், பல விவகாரங்களில் உதயநிதியின் முயற்சிகளுக்கு சீனியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை” என்றனர்
நம்மிடம் பேசிய உதயநிதி ஆதரவாளர்கள், “மிசா விவகாரத்தைச் சட்டமன்றத்தில் பேசி வசமாகச் சிக்கினார் முதல்வர் விஜய். அந்த நேரத்தில் கழகத் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவும் தீயாகப் பரவி த.வெ.க-வைத் திணறடித்தது. விஜய்க்கு தலைவரின் வீடியோ எதிர்வினையே போதும் , அந்த வீடியோவை மில்லியன் கணக்கில் பரப்பி த.வெ.க டார்கெட் செய்யலாம் என்பதுதான் தலைமையின் ப்ளான். ஆனால், ‘முதல்வருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும்’ என சொல்லியிருக்கிறார்கள் தி.மு.க சீனியர்கள்.

முதலில், ‘அதெல்லாம் வேண்டாம்..’ என்பதுதான் தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோரின் எண்ணமாக இருந்திருக்கிறது. ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில் வரம்பு மீறிப் பேசி, த.வெ.க எதிர்ப்பு உணர்வை மழுங்கடித்து திசைதிருப்பிவிட்டார்கள் சீனியர்கள். இதனால் ரொம்பவே கொதித்துப் போய்விட்டார் உதயநிதி. ‘இந்த சீனியர்கள வச்சிட்டு எதுவும் செய்ய முடியாது’ என கொதித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஒரு முடிவெடுத்தால் ‘நாஙகள் தலைவரிடம் பேசிக் கொள்கிறோம்’ என ஓவர் டேக் செய்துவிடுகிறார்கள். அதுவே பின்நாட்களில் ஈகோ மோதலாக மாறிவிடுகிறது” என்றனர்.
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், “உதயநிதிக்கும் சீனியர்களுக்கும் ஒருவித இடைவெளி நீடிப்பது உண்மைதான். ஆனால் அதையே காரணமாகச் சொல்லிக் கொண்டிருந்தால் எதிர்க்கட்சி அரசியலை தி.மு.க-வால் மேற்கொள்ள முடியாது. எனவே உடனையாக சீனியர்களுக்கும் உதயநிதிக்கு இணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பாக, தி.மு.க-வின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் மாவட்டச் செயலாளர்களை தலைமையிலிருந்து நியமிக்க வேண்டும் என்பதுதான் இளைஞரணியினரின் விருப்பம். ஆனால் தேர்தல் வைக்க வேண்டும் என எண்ணுகிறார்கள் சீனியர்கள். இப்படி ஓவ்வொரு விவகாரத்தில் எலியும் பூனையுமாக மோதிக் கொள்வது அறிவாலயத்துக்கு நல்லதல்ல” என்றனர்.




