காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
இருப்பினும் தமிழக அரசின் இந்தச் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திமுக எம்.பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், `மாணவர்கள் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு தடை விதிக்கும் வகையில் கல்லூரிக் கல்வி ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கையை, கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு தவெக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதேபோல், நேற்று குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சர்ச்சைக்குரிய அறிக்கையும் வெளியாகி திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவின்றி அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்களா? அல்லது முதலில் தனது பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு வந்ததும் அதிகாரிகள் மீது பழியைப் போட்டு பின்வாங்குகிறதா இந்த அரசு? ஜனநாயக உரிமைகளை பறிக்க முயற்சிப்பதும், எதிர்ப்பு எழுந்ததும் பின்வாங்குவதும் தவெக அரசில் தொடர்கதையாகிவிட்டது’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.




