கோவை பீளமேடு பா.ஜ.க அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கரூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நான்கு கோயில்களின் ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான 3,085 ஏக்கர் நிலத்தை 9ம் தேதி மாவட்ட ஆட்சியர், இணை ஆணையரால் பரிந்துரைக்கப்பட்டு, உடனடியாகவே அவசர அவசரமாக பட்டா போட்டுக் கொடுத்திருக்கின்றனர். முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்து கோயில்களின் நிலத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்து இருக்கின்றாரா? இதற்கு உறுதுணையாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் இருக்கிறாரா? எதற்காக இந்த அவசரம்? முதல்வர் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்திருக்கிறார். பா.ஜ.க சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
பணம் கொடுப்பது மட்டும் லஞ்சம் இல்லை. தனக்கு வேண்டியவர்களுக்கு செய்யும் உதவிகூட லஞ்சம்தான். விஜய் கூட்டத்திற்கு வந்து இறந்தவர்களுக்கு மட்டும் வேலை வழங்கியிருப்பதும் ஒரு லஞ்சம் தான். ஒரே நாளில் 3,085 ஏக்கர் நிலத்தை கொடுப்பது எந்த அடிப்படையில்? இதுவும் ஒரு விதத்தில் லஞ்சம் தான். கரூர் சம்பவத்தில் இறந்த 41 பேர் குடும்பத்தினருக்கு அரசு வேலை ஆணை வழங்கியிருக்கிறார். சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். மின்சாரத் துறை, போக்குவரத்து துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத் துறை என ஏராளமான துறைகளில் வாரிசுகள் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை வழங்க வேண்டி இருக்கிறது. குரூப் ஒன் உட்பட பல்வேறு தேர்வுகளில் படித்து தேர்வு எழுதியவர்களும் இருக்கின்றனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு முன்னுரிமை கொடுக்கவில்லை. இப்போது பணி கொடுத்தது தவறு இல்லை. ஆனால் சீனியாரிட்டி அடிப்படையில் அவர்களுக்கு கொடுத்திருந்தால் சரியாக இருக்கும்.
கரூரில் முதல்வர் பேசியதை அரசு பள்ளியில் ஒளிபரப்பு செய்தது போன்ற சம்பவங்கள் இதுவரை நடந்ததில்லை, சினிமாவில் தான் பார்த்திருக்கின்றோம். விஜய் வரும்போது பள்ளிக்கு விடுமுறை விடுவது, அவரது காட்சிகளை பள்ளியில் ஒளிபரப்புவது போன்றவை தவறான விஷயம், மாணவர்களை தவறான வழியில் எடுத்துச் செல்வது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தவறு எங்க நடந்தாலும் அது கண்டிக்க வேண்டியதுதான். அயோத்தி ராமர் கோயில் குறித்து இறுதி அறிக்கை வந்தவுடன் கண்டிப்பாக அது குறித்து பேசுவேன். மதிப்பிற்குரிய திருமாவளவன் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருக்கிறார். தி.மு.க கூட்டணியில் இருந்தவர், த.வெ.க-விற்கு சென்றவுடன், அவரது பேச்சு மாறி இருக்கின்றது. தி.மு.க-வுடன் நட்புடன் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். திருமாவளவன் என்ன எண்ணத்தில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் 2029 தேர்தலில் எல்லோரும் சேர்ந்து பா.ஜ.க-வை எதிர்க்க தயாராகின்றனர் என்பது தெரிகிறது. பா.ஜ.க-வைப் பார்த்து அனைவரும் பயப்படுகின்றனர்” எனத் தெரிவித்தார்.




