மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் தங்களை தனி அணியாக அறிவிக்கவேண்டும் என்று கோரி மக்களவை சபாநாயகரிடம் மனு கொடுத்து இருக்கின்றனர். இதனிடையே அவர்கள் 6 பேரும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர முடிவு செய்துள்ளனர். இதனால் உத்தவ் தாக்கரே கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
அவரது கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் இன்று காலை சமூக வலைத்தள பக்கத்தில் பிரிந்து சென்ற எம்.பி.க்களை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அவர் தனது பதிவில், “சிலர் நாய்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் விசுவாசமாக இல்லை”என்று குறிப்பிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக அவர் அளித்த பேட்டியில், கட்சி கொறடாவின் உத்தரவை 6 எம்.பி.க்களும் மீறி இருக்கின்றனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கியுள்ளது.
சிவசேனா தொண்டர்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டவர்கள் கோழைகள். சிவசேனா தொண்டர்கள் அவ்வளவு கோழைகள் அல்ல. இவர்கள் தங்களை சிவசேனா தொண்டர்களாக கருதுகிறார்கள். ஆனால் அவர்கள் ஜெய்ப்பூரில் மறைந்து கொண்டார்கள். அவர்களின் பதவியை பறிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.
அவர்களை தகுதி நீக்கம் செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். மக்களவை சபாநாயகர் விதிகள், சட்டம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி செயல்பட்டால், இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். சிவசேனா 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
மேலும் பாலாசாகேப் தாக்கரேவின் பிறந்த நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. நாங்கள் எப்போதும் பாலாசாகேப் தாக்கரேயிடமிருந்து உத்வேகம் பெறுகிறோம். தீமை ஒழியும் வரை தொடர்ந்து போராடுவோம்” என்று அவர் கூறினார். சஞ்சய் ராவத் மீது ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே கட்சியினர் கோபத்தில் இருக்கின்றனர். சஞ்சய் ராவத் தான் உத்தவ் தாக்கரேயின் கட்சியை நடத்துவதாக பரவலாக பேசப்படுகிறது.!




