மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகக் களம் இறக்கப்பட்ட மீனாட்சி நடராஜனின் வேட்புமனு அதிரடியாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை திங்கட்கிழமை நடைபெற்றது. அப்போது பா.ஜ.க தலைவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், “காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் தனக்கு எதிராகத் தெலங்கானாவில் நிலுவையில் உள்ள ஒரு குற்றவியல் வழக்குக் குறித்த விவரங்களைத் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் திட்டமிட்டு மறைத்துள்ளார். வேட்புமனுத் தாக்கலின் போது வேட்பாளர்கள் தங்களின் பின்னணி மற்றும் வழக்கு விவரங்களை முழுமையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாய விதியாகும். ஆனால், மீனாட்சி நடராஜன் தகவல்களை மறைத்துள்ளதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தது.
பா.ஜ.க.வின் இந்தக் குற்றச்சாட்டைக் காங்கிரஸ் கட்சி முற்றிலும் மறுத்துள்ளதுடன், இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது என்றும் கூறியுள்ளது. இது குறித்துப் பேசிய மத்தியப் பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கார், “மீனாட்சி நடராஜன் மீது எந்தவொரு குற்றவியல் வழக்கும் இல்லை. எனவே, பா.ஜ.க. குறிப்பிடும் விவகாரத்தை அவர் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டிய அவசியம் எழவில்லை. நேர்மையான ஒரு பெண் வேட்பாளரின் எழுச்சியைக் கண்டு, காங்கிரஸின் வெற்றியைக் கண்டு பயந்துபோன பா.ஜ.க.வின் உண்மையான முகம் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது” என்று சாடினார்.
மேலும் இது குறித்து விளக்கம் அளித்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் விவேக் தன்கா, “தெலங்கானா விவகாரத்தில் மீனாட்சி நடராஜனுக்கு எதிராக எந்தவொரு FIR -ம் பதிவு செய்யப்படவில்லை. அங்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்கப்பட்ட ஒரு சாதாரண சட்டப்பூர்வ நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவரது வழக்கறிஞர் ஏற்கனவே உரிய பதிலும் அளித்துள்ளார்.
தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முறையான குற்றவியல் வழக்குகளை மட்டுமே குறிப்பிட வேண்டும். சாதாரண நோட்டீஸ்களை அல்ல. பா.ஜ.க. திட்டமிட்டு வீண் வதந்திகளைப் பரப்பி வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
பா.ஜ.க. வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த விவகாரம் 2025-ம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கைப் பின்னணியாகக் கொண்டது. கடந்த 2025 ஆகஸ்ட் 20 அன்று, ஏ. ஸ்ரீலதா என்ற பெண் ஹைதராபாத்தில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு புகாரை அளித்தார். அதில் மீனாட்சி நடராஜன் 4-ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் இந்த புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 2025 செப்டம்பர் 17 அன்று மீனாட்சி நடராஜனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு எதிராக அக்டோபர் 24 அன்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, இந்த புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதால் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரினார். ஆனால், நவம்பர் 17 அன்று வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்த நீதிமன்றம், விசாரணையைத் தொடர்ந்து நடத்த முடிவு செய்தது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த விவரங்களை பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடாததைத் தெரிவித்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் படி தேர்தல் நடத்தும் அதிகாரி மீனாட்சி நடராஜனின் மனுவை நிராகரித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 230 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சட்டப்பேரவையில், பா.ஜ.க.விற்கு 164 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த பலத்தின் மூலம் பா.ஜ.க. 2 இடங்களை மிக எளிதாகக் கைப்பற்றிவிடும். அத்துடன் அவர்களிடம் 48 உபரி வாக்குகளும் உள்ளன. மூன்றாவது இடத்தைக் கைப்பற்ற பா.ஜ.க.விற்கு மேலும் 10 வாக்குகள் தேவைப்பட்டன.
மறுபுறம், காங்கிரஸிற்கு 63 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால் ராஜேந்திர பாரதி, முகேஷ் மல்ஹோத்ரா ஆகிய இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கத் தகுதியில்லை என அறிவிக்கப்பட்டதால், காங்கிரஸின் வாக்கு பலம் 61 ஆகக் குறைந்தது. ஒரு இடத்தை வெல்ல 58 வாக்குகள் தேவை என்ற நிலையில், காங்கிரஸிற்குப் போதிய பலம் இருந்தாலும், பா.ஜ.க. தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரம் மூலம் இழுக்க முயல்வதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இதற்காகத் தங்களின் எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைத்துக்கொள்ள, அவர்களைக் காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்திற்குச் சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் செல்ல செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், மீனாட்சி நடராஜனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் களம் பா.ஜ.க.விற்குச் சாதகமாக மாறி உள்ளது. இதனால் எம்.எல்.ஏ.க்களை கர்நாடகா அனுப்பும் முடிவைக் கைவிட்ட காங்கிரஸ், சிறப்பு விமானப் பயணத்தை ரத்து செய்து விட்டு எம்.எல்.ஏ.க்களைத் திரும்ப அழைத்துக் கொண்டது.
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமையகமான ‘நிர்வாசன் சதன்’ பகுதிக்கு இன்று மாலை சென்றனர்.
ஆனால், முன்கூட்டியே அனுமதி பெறாமல் அவர்கள் திடீரெனச் சென்றதால், தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மாலை 7:15 மணிக்கே அலுவலகத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றிருந்தனர்.
இருப்பினும், காங்கிரஸ் தரப்பில் தங்களது புகார் மனுவை தேர்தல் ஆணையத்தின் வரவேற்புப் பிரிவில் சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்துத் தேர்தல் ஆணையத்தின் முக்கிய அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




