2023-ம் ஆண்டு கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் போதே, இவருக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி… தற்போதைய கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இரண்டரை ஆண்டு ஆட்சி என்று பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
சரியாக இரண்டரை ஆண்டுகள் கழித்து, டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற குரல்கள் கர்நாடகாவில் எழத் தொடங்கின.
அந்தக் குரல்களை ‘தலைமை முடிவு செய்யும்’ என்கிற ஒற்றைப் பதிலால் கடந்து சென்றார் சித்தராமையா. இதில் டி.கே.சிவக்குமாருக்கு உடன்பாடில்லை என்றாலும், அவரும் இதே பதிலைத் தான் கூறி வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில், டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் ‘கர்நாடகா முதல்வர் யார்?’ என்கிற தொடர் சந்திப்புகளும், கூட்டங்களும் நடந்துகொண்டே இருந்தன.
அதன் முடிவில், சித்தராமையா முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவார் என்று முடிவு எடுக்கப்பட்டது.
அதன் படி, இன்று அவரது வீட்டில் நடந்த காலை விருந்திற்குப் பிறகு தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவித்துள்ளார்.
இதனையடுத்து நாளை டி.கே.சிவக்குமார் முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள சித்தராமையாவிற்கு ராஜ்ய சபா சீட்டும், அவரது மகனுக்கு மாநிலத்தில் அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட உள்ளது எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது.




