கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் துடியலூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனை போக்குவதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும்.
தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக வருகின்றனர். அதற்கான மருந்துகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். அவையும் கூடிய விரைவில் சரி செய்யப்படும். அதே சமயம் நாய் கடிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்றார்.
B.A.B.L படிப்பு என அபிடவிட்டில் குறிப்பிட்டுவிட்டு, டாக்டர் என பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டு இருப்பதாக எழுந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு, “நான் டாக்டரேட் பட்டம் ஜோதிடத்தில் வாங்கி உள்ளேன். என்னுடைய புரொபஷன் சட்டப்படிப்புதான். நான் அடிப்படையில் வழக்கறிஞர். ஜோதிடத்தில் ஆர்வம் என்பதால், அதில் டாக்டரேட் முடித்துள்ளேன்.
மருத்துவம் படித்த டாக்டராக இருந்தாலும் சரி, டாக்டரேட் படித்திருந்தாலும் சரி அதனை டாக்டர் என்றுதான் பொதுவாக குறிப்பிடுவார்கள். அப்படி இருக்கும்போது, டாக்டர் என்பது எனக்கு புனைப்பெயராக மாறிவிட்டது. என்னுடைய வலைதள வீடியோக்கள் அனைத்தும் உடல் நலம் சார்ந்து அதிகமாக இருக்கும். அதனால் டாக்டர் படித்துக் கொண்டு இவ்வாறு சர்ச்சையாக பேசுகிறேன் என்று புரிந்து கொண்டுவிட்டார்கள். நான் அடிப்படையில் சட்டப்படிப்பு படித்தவர் ஜோதிடத்தில் டாக்டரேட் முடித்துள்ளேன்” என பதிலளித்தார்.




