கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “முதல்வர் என்ன நினைக்கிறாரோ அதை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. முதல்வர் ஒவ்வொன்றாகச் செய்து வருகிறார். 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்குப் பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பது எனத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
டாஸ்மாக் கடைகள் எங்கெங்கு இருக்கிறது என்பதை அறிந்து, பேருந்து நிலையம், ஆலயம் ஆகிய இடங்களில் இருக்கக்கூடாது என 717 கடைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் பெரிய சாதனை. பொறுப்பேற்றவுடன் இவ்வளவு சாதனைகள் செய்திருப்பது இந்தியாவில் இவரைத் தவிர வேறு யாரும் இல்லை.
எடப்பாடி பழனிச்சாமி நிலைப்பாடுகளைப் பார்க்கும்போது, ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரது இயக்கம் (அதிமுக) அவரால் வலுவிழுந்து இருக்கிறது என்றுதான் குறிப்பிட முடியும். தான் ஒருவர் மட்டும் போதும் என்று அவர் நினைக்கிறார்” என்றார்.
10 பேருக்கு மட்டும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, “அமைச்சரவை என்பது இப்படித்தான் இருக்கும். ஜெயலலிதா இருக்கும்போது, ஏழு பேரைத்தான் முதலில் அமைச்சர்களாகப் போட்டார்கள். பின்னர் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதேபோல அமைச்சரவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும்” எனப் பதிலளித்தார்.
கஜானா காலி என விஜய் சொல்லி இருக்கும் நிலையில் நிதியமைச்சரான உங்களுக்கு நெருக்கடி எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, “நெருக்கடிகளைச் சமாளிக்கிற திறமை த.வெ.க. தலைவர், நிரந்தர முதல்வர் விஜய்யால் முடியும்.
பொருளாதாரம் என்பது படிப்படியாக ஆய்வு செய்துதான் தெளிவான விளக்கம் சொல்ல முடியுமே தவிர நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் சொல்ல முடியாது” என்றார்.




