விருதுநகரில் அதி.மு.க மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.டி. ராஜேந்திர பாலாஜி, ”2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றி சுனாமி போன்றது. எனவே இது நிலையானதல்ல.
அதிகாரத்தில் இருந்தால்தான் கட்சியை நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்படும். அந்த நிலை அ.தி.மு.கவிற்கு இல்லை. த.வெ.க தலைவர் விஜய், ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக இல்லாமல் வந்திருக்கிறார்.
ஒரு நட்சத்திர நடிகரின் மாயையில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். வேட்பாளர் யார் என்று தெரியாமலேயே வாக்குகள் அவர்களுக்கு விழுந்திருக்கின்றன. த.வெ.க கட்சியில் வெற்றி பெற்றவர்கள் என்ன சாதிக்க முடியும்?
தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெறும், தி.மு.க இரண்டாவது இடத்திற்கு வரும் எனப் பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்த போதிலும், கடைசி நான்கு நாட்களில் ஒரு மாய உலகில் செல்பேசி மூலம் மக்கள் மயங்கிவிட்டார்கள் என்று கூறினார்.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் மக்களின் மனநிலையை மாற்றி வாக்குகளைப் பெறுவது வெளிநாடுகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது அது தமிழகத்திலும் நடைபெற்றுள்ளது. விஜய் கட்சிக்கு வாக்களித்தவர்கள் தற்போது மனம் வருந்தும் செயல்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வந்திருப்பது காலம் தந்த கொடை. கட்சியில் ஏற்பட்டிருக்கும் விரிசல்களை கட்சித் தலைமை பார்த்துக்கொள்ளும்.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் என ஒரு கோடியே 30 லட்சம் பேர் வாக்களித்துள்ளார்கள். வாக்காளர்கள் நம் பக்கமே இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏற்பட்ட தேர்தல் சுனாமியில் சிக்கி வெற்றி வாய்ப்பை இழந்தவர்களில் நானும் ஒருவன்.
விஜய் வாங்கிய வாக்குகள் அனைத்தும் அ.தி.மு.க-வின் வாக்குகளே. தி.மு.கவின் வாக்குகள் அப்படியே அவர்களுக்கே சென்றது. அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவின் வாக்குகள் விஜய் அணிக்குச் சென்றது காலச் சூழ்நிலை.” என்றார்.




