இந்திய நேரப்படி, நேற்று முன்தினம் (மே 4), அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற அமெரிக்கா உதவி செய்யும்’ என்று Project Freedom-ஐ அறிவித்திருந்தார்.
ஆனால், முழுமையாக மூன்று நாள்கள் முடிவதற்குள் தன்னுடைய பேச்சை மாற்றி பேசியிருக்கிறார் ட்ரம்ப்.
இன்று (இந்திய நேரப்படி) தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில்…
“பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளின் கோரிக்கையை ஏற்றும், ஈரான் நாட்டுக்கு எதிரான போரில் நாம் பெற்றுள்ள மிகப்பெரிய ராணுவ வெற்றிகளைக் கருத்தில் கொண்டும், ஒரு முடிவை எடுத்துள்ளோம்.
மேலும், ஈரான் நாட்டுப் பிரதிநிதிகளுடன் ஒரு முழுமையான மற்றும் இறுதிக்கட்ட ஒப்பந்தத்தை எட்டுவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இரு தரப்பினரும் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.
அதன்படி, ஈரான் மீதான கடல் வழி முற்றுகை முழு அமலில் இருக்கும் அதே வேளையில், ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ அதாவது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை வெளியேற்றும் பணி – தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
இந்த இடைவெளியில், அந்த இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சொல்வதும், பின்னர், ஈரானுக்கு மிரட்டல் விடுப்பதும் ட்ரம்பின் ‘புது’ வழக்கமாக மாறியிருக்கிறது. இதில் எது உண்மை… எது இல்லை என்பது ட்ரம்பிற்கே வெளிச்சம்.




