பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை த.வெ.க பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை நாடியிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “த.வெ.க தலைவர் விஜய் பாஜக-விற்கு எதிராக நின்று வெற்றி பெற்று இருக்கிறார். மதவாதத்தை ஆதரிப்போம் என்று சொன்னவர்களை த.வெ.க தோற்கடித்து இருக்கிறது.
இதெல்லாம் தேர்தல் முடிவில் வெளிவந்த உண்மை. எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி நிலை என்ன என்பதை அரசியல் விவகாரக் குழு முடிவெடுத்து இருக்கிறது.
அந்த முடிவை அகில இந்திய தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அறிவிப்பார். எங்களைப் பொறுத்தவரை பாஜக தமிழகத்தில் வரக்கூடாது, ஆர்.எஸ்.எஸ் வரக்கூடாது. அதற்காகச் சண்டை போடுகிறோம்.
இந்தத் தேர்தல் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறது. கூட்டணி என்பது தேர்தலுக்கானது. 2026 தேர்தல் முடிவுற்றது. த.வெ.க-விடம் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா என்று கேட்கிறீர்கள்.. இதெல்லாம் பிள்ளை பிறக்கும் முன் பெயர் வைப்பது மாதிரி.. அதனால் நடக்கட்டும்.

தமிழக வாக்காளர்கள் தெளிவாக முடிவு எடுத்து வருகிறார்கள். சிலர் சொல்லிவிட்டு இருந்தார்கள் தமிழக மண்ணுக்கு ஆட்சியில் பங்கு ஒத்துவராது என்று… மக்கள் அதற்குப் பதில் சொல்லிவிட்டார்கள். தமிழக மக்கள் தீர்மானித்துவிட்டார்கள்” என்று பேசியிருக்கிறார்.




