‘அடேங்கப்பா, நிறைய பண்ணிருக்கீங்களே, இந்த ஆட்சியின் சாதனைகளைச் சொல்ல சுவரே பத்தாது போல..’ என நகைச்சுவை நடிகர் டெலிபோன் ராஜ் வியந்து போய் பேச, பின்னணியில் ‘தமிழ்நாட்டின் பெருமைகள் சொல்லும் திராவிடப் பெருஞ்சுவர்’ என ஒலிக்க, மீடியா, சோஷியல் மீடியா என எல்லா இடங்களிலும் உரக்க கேட்கிறது திமுகவின் அந்தத் தேர்தல் விளம்பரம்.
‘தேர்தல் விளம்பரம் மட்டுதானா, பிரசாரத்துக்கெல்லாம் போகவில்லையா’ எனக் கேட்கலாமென ‘டெலிபோன்’ ராஜுக்கு போன் போட்டோம்.
”அட நீங்க வேற காமெடி பண்ணாதீங்க தம்பி. 2021 தேர்தல்ல இதேமாதிரி ஒரு தேர்தல் விளம்பரத்துல நடிச்சேன். அப்ப பன்னீர்செல்வம் மாதிரி கெட் அப் போடணும்னு சொன்னாங்க. உடனே ஓகே சொல்லி அந்தக் கெட்-அப் போட்டு அவரைக் கொஞ்சம் கலாய்ச்சு அந்த விளம்பரமும் வந்தது. அதிமுககாரங்க சிலர் என்னை அடிக்கவெல்லாம் வந்தாங்க.
அப்ப என்னைச் சுத்தியிருந்தவங்க ‘திமுக ஆட்சி அமைஞ்சிடுச்சுன்னா, எங்கேயோ போயிடுவப்பா’னு சொன்னாங்க. ஆட்சியும் வந்தது. நான் எங்கேயும் போகலை. எம்பாட்டுக்கு நடிச்சிட்டு இருந்தேன். இதோ அஞ்சு வருஷம் கழிச்சு திரும்பவும் தேர்தல் விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க.
சம்பளமா 5000 ரூபாய் தந்தாங்க. ஷூட்டிங் போய் வந்த காருக்கு 1500 ரூபாய் ஆச்சு. 1000 ரூபாய்தான் தந்தாங்க. என் சம்பளத்துல இருந்து 500 ரூபாய் நான் சேர்த்துக் கொடுத்தேன்.
விளம்பரம் பார்த்துட்டு இயக்குநர் வசந்தபாலன் பேசினார். ஒரு படத்துல அப்பா கேர்க்டர் தர்றேனு சொல்லியிருக்கார். அது ஒண்ணுதான் லாபம்.
விளம்பரத்துல ‘அடேங்கப்பா, இவ்ளோ பண்ணியிருக்கீங்களே’ங்கிற டயலாக் பேசினேன். பேசி முடிச்சுட்டு உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்தேன். பல விஷயங்கள் வந்து போச்சு. வெளியில சொன்னா வெக்கக் கேடுங்க. ஆனாலும் சொல்லாமவும் இருக்க முடியலை” என்றவர், கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்..
“பரம்பரை திமுக குடும்பம் எங்களோடது. நாகர்கோவில்ல நான் ஆறாவது படிச்சிட்டிருந்தப்ப அங்க கலைஞர் வந்து பேசின ஒரு மேடையில் எம்.ஆ.ராதா வேஷம் போட்டு பேசினேன். திமுக கூட்டம் எங்க நடந்தாலும் அப்பா என்னைக் கூட்டிட்டுப் போவார்.
அப்படித்தான் திமுக மீது ஈர்ப்பு உண்டாச்சு. பிறகு நடிகனா சென்னை வந்த பிறகும் திமுக மீதான பிடிப்பு விடலை. யாராவது திமுக ஆட்சி பத்தி விமர்சிச்சா, கோபப்படாம பொறுமையா அவங்களைக் கூப்பிட்டு கலைஞர் தமிழ்நாட்டுக்குச் செஞ்சதையெல்லாம் விளக்கி அவங்களை கன்வின்ஸ் ஆகச் செய்வேன்.
இதையெல்லாம் எதையும் எதிர்பார்த்துச் செஞ்சதே இல்லை. ஆனா ஒரு கட்டத்துல கட்சி மேல பிரியமா இருக்கிற நமக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க மாட்டேங்குதேங்கிற ஆதங்கம் வர ஆரம்பிச்சிடுச்சு.
43 வருஷமா நடிச்சிட்டிருக்கேன். திமுக ஆதரவாளன்னு தலைமை வரைக்கும் தெரியும். ஆனா இப்ப வரை கலைமாமணி விருது வாங்கினதில்லை.

விருதுக்காச்சும் ‘உனக்குத் தகுதி பத்தாது’னு ஏதாச்சும் சொல்லலாம். ஹவுசிங் போர்டுல குறைந்த விலையில ஒரு வீடு கிடைக்குமானு கேட்டுப் பார்த்தேன். இலவசமா கேக்கலை. எங்களை மாதிரி சின்னச் சின்ன நடிகர்களுக்குப் பெரிய சம்பளம் இருக்காது. அதனால் சொந்த வீடுங்கிறது கனவாத்தான் இருக்கும். நானும் வாடகை வீட்டுலதான் இருக்கேன். அதனால அந்தக் கோரிக்கையை வச்சேன். பூச்சி முருகனைப் பார்க்கச் சொன்னாங்க. பார்த்தேன். ஆனா அதுவும் நடக்கலை.
நடிகர் நடிகைகள் பலரை அவங்க நேத்து வரை திமுகவைத் திட்டினவங்களா இருந்தாலும் பரவால்லனு கூப்பிட்டு கட்சியில பேச்சாளராக்குறாங்க. ‘நட்சத்திரப் பேச்சாளர்’னு ஒரு பொறுப்பு இருந்தா அதை வச்சு இந்த மாதிரி தேர்தல் நேரத்துல நாலு காசு சம்பாதிக்கலாம்னு கேட்டேன். வடிவேலு சார் எனக்காகச் சிபாரிசும் செய்தார். ஆனா இப்ப வரை அதுவும் கிடைக்கலை.
இப்படி நிறையப் பேசலாம். அந்தளவு நொந்து போயிட்டேன். இருந்தாலும் அதென்னவோ தெரியல, இந்தக் கட்சியை விட்டு வெளியில வரவும் முடியலை.
அந்தப் பக்கம் அதிமுகவுல என்னை மாதிரி நடிகர்களுக்கு அவ்வளவு செய்றாங்க. தேர்தல் நேரம் வந்தா அவங்க அவ்வளவு குதூகலமா இருக்காங்க. அதைப் பார்க்கிறப்பதான் வருத்தமா இருக்கு.
நீங்களே சொல்லுங்க, போன தேர்தல்ல ஒ.பி.எஸ் வேஷம் போட்டு அவரைக் கலாய்க்கச் சொன்னாங்க. இன்னைக்கு அதே பன்னீர்செல்வம் திமுகவுல சேர்ந்து எம்.எல்.ஏ சீட்டும் வாங்கிட்டார்.
இவங்க பேச்சைக் கேட்டு கலாய்ச்சு சிலருடைய பகையைச் சம்பாதிச்சதுதான் எனக்கு மிச்சம். இதையெல்லாம் நினைச்சா வருத்தம் வராம இருக்குமா சொல்லுங்க” என ரொம்பவே ஆதங்கப்படுகிறார் ராஜ்.




