நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அரசியல் மையங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து விவாதிக்க இன்று சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது. இந்த மசோதா 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியபோதே அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. ஆனால், தற்போது 2011 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீர்திருத்தம் செய்து, அதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் தொகுதிகளை அதிகப்படுத்தப் போவதாக மத்திய பா.ஜ.க அரசு அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சிகள், தொகுதி மறு சீரமைப்பின் மூலம் தென் மாநிலங்கள் கடுமையாக புறக்கணிக்கப்படும் என்றக் குற்றச்சாட்டுடன் அதை எதிர்க்கின்றன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்த முக்கியமான மசோதா குறித்த விவாதம் இன்று காலையில் தொடங்கியது. பல உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களை எழுப்பியுள்ளனர். அந்த விவகாரங்கள் குறித்து விரிவான மற்றும் துல்லியமான தகவல்களை இந்த அவைக்கு நாங்கள் வழங்குவோம். அதனால், அந்தக் குறிப்பிட்ட விவரங்களுக்குள் நான் இப்போது செல்ல விரும்பவில்லை. ஒரு நாட்டின் வளர்ச்சியில் சில முக்கியமான தருணங்கள் அமைகின்றன.
அத்தகைய தருணங்களில், சமூகத்தின் மனநிலையும், தலைமைத்துவத்தின் திறமையும் இணைந்து அந்தத் தருணத்தைப் பற்றிக்கொண்டு, அதை நாட்டிற்கான ஒரு சொத்தாக மாற்றுகின்றன. அதன் மூலம் ஒரு வலிமையான மரபை அவை உருவாக்குகின்றன. இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில், இவையும் அத்தகைய முக்கியமான தருணங்களே. 25-30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த யோசனை முதன்முதலில் கருக்கொண்டபோது, அதற்கான தேவை உணரப்பட்டபோதே நாம் இதைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்.

இன்று நாம் அதை ஒரு முதிர்ந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளோம். தேவைக்கேற்ப, இது அவ்வப்போது மேம்படுத்தப்பட்டும் வருகிறது. இதுவே ஜனநாயகத்தின் அழகாகும். நம் நாடு ‘ஜனநாயகத்தின் தாய்’. நமது ஜனநாயகம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் ஒரு வளர்ச்சிப் பயணமாகத் திகழ்கிறது. இந்த அவையில் வீற்றிருக்கும் நம் அனைவருக்கும், அந்த வளர்ச்சிப் பயணத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கும் நற்பேறு வாய்த்துள்ளது.
நாட்டின் மக்கள்தொகையில் பாதியளவு கொண்ட பெண்களை உள்ளடக்கிய, தேசத்தைக் கட்டமைக்கும் இத்தகைய ஒரு முக்கியச் செயல்பாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருப்பது, நாம் அனைவரும் பெற்ற பெரும் பேறு என்று நான் தொடக்கத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம், இந்த முக்கிய வாய்ப்பை நழுவவிட்டுவிடக் கூடாது. இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நாட்டிற்கு ஒரு புதிய திசையை வழங்கப் போகிறோம். நமது ஆட்சி நிர்வாக அமைப்பில் உணர்வுபூர்வமான அணுகுமுறையை ஊடுருவச் செய்ய, நாம் ஓர் அர்த்தமுள்ள முயற்சியை மேற்கொள்ளப் போகிறோம். இது நாட்டின் அரசியலை வடிவமைப்பது மட்டுமல்லாமல், நாட்டின் எதிர்காலத் திசையையும் அதன் நிலையையும் தீர்மானிப்பதாகவும் அமையும்.
21-ம் நூற்றாண்டில், இந்தியா ஒரு புதிய தன்னம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்கிறது. இன்றைய உலகில் இந்தியாவின் ஏற்புடைமையை நாம் அனைவரும் உணர்கிறோம். இது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய ஒரு தருணமாகும். ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த இந்தியா) என்பது வெறும் ரயில்வே, சாலைகள், உள்கட்டமைப்பு அல்லது பொருளாதார மற்றும் வளர்ச்சி சார்ந்த புள்ளிவிவரங்களை மட்டுமே குறிப்பதல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன். ‘விக்சித் பாரத்’ குறித்து அத்தகைய குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்கள் நாம் அல்ல. கொள்கை உருவாக்கமானது, ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ (அனைவருடனும், அனைவருக்கும் வளர்ச்சி) எனும் மந்திரத்தை உண்மையாகவே பிரதிபலிக்கும் ஒரு ‘விக்சித் பாரதத்தையே’ நாம் விரும்புகிறோம். நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் கொள்கை உருவாக்கத்தில் ஓர் அங்கமாகத் திகழ வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும்.
நாம் ஏற்கெனவே இதில் காலதாமதம் செய்துவிட்டோம். அதற்கான காரணங்கள் எவையாக இருப்பினும், அதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருப்பினும், இந்த எதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இந்தச் செயல்முறை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டன என்பது எனக்குத் தெரியும். ஒரே ஒரு கட்சியைத் தவிர, நாங்கள் சந்தித்த மற்ற அனைவரும் கொள்கைரீதியான எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அதன் பிறகு என்ன நடந்திருந்தாலும், தற்போது ஓர் அரசியல்ரீதியான திசைவழியை நாம் முன்னெடுத்துச் செல்கிறோம். அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமே சிந்திப்பவர்களுக்கு நான் ஓர் அறிவுரையையும் வழங்க விரும்புகிறேன். நம் நாட்டில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதம் தொடங்கியதிலிருந்து, பெண்களுக்கு உரித்தான இந்த இட ஒதுக்கீட்டு உரிமையை எதிர்த்தவர்கள் யாராக இருப்பினும், அவர்களை இந்நாட்டுப் பெண்கள் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை” என்று குறிப்பிட்டார்.




