நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அரசியல் மையங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து விவாதிக்க இன்று சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது. இந்த மசோதா 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியபோதே அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. ஆனால், தற்போது 2011 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீர்திருத்தம் செய்து, அதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் தொகுதிகளை அதிகப்படுத்தப் போவதாக மத்திய பா.ஜ.க அரசு அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சிகள், தொகுதி மறு சீரமைப்பின் மூலம் தென் மாநிலங்கள் கடுமையாக புறக்கணிக்கப்படும் என்றக் குற்றச்சாட்டுடன் அதை எதிர்க்கின்றன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவரும், எம்.பி-யுமான அகிலேஷ் யாதவ் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, “பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்துவதில் மத்திய அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது? இப்போது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுவிட்டது. நாங்கள் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பையும் சேர்த்துக் கேட்டோம். ஆனால், அதை மிக தந்திரமாக அரசு தவிர்க்கிறது. இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிந்தால், சாதி வாரியான கணக்கெடுப்பு அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு என பா.ஜ.க-வின் கொள்கைக்கு எதிரான பிரச்னை எழும்.
அதற்காகவே, மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தாமதப்படுத்தி, அதன் முடிவு வருவதற்குள் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா அவசர அவசரமாக தாக்கல் செய்யப்படுகிறது. நீங்கள் மக்களை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். கொள்கையளவில் பெண்கள் இட ஒதுக்கீட்டை முழுமனதுடன் ஆதரிக்கிறோம். அதே நேரம், தொகுதி மறு வரையறை மூலம் அதைச் செயல்படுத்துவதை எதிர்க்கிறோம்” என்றார்.
அகிலேஷ் யாதவ்-ன் உரைக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பும் நடத்தப்படும். தற்போது, அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாதி அடிப்படையிலான கணக்கெடுப்புடன் சேர்த்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் நடைபெறும் என்று நான் அவைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்” என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.பி. தர்மேந்திர யாதவ், “தொகுதி மறுவரையறையை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செயல்முறையிலிருந்து பிரிப்பதன் மூலம், இந்த நடவடிக்கைகள் அரசியலமைப்பை சிதைக்க முயற்சிக்கிறது. எனவே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம் பெண்களுக்கான விதிகள் அதில் சேர்க்கப்படுவதே அனைவருக்குமான உரிமையாக இருக்கும். எனவே, தற்போது முன்மொழியப்பட்ட மசோதாக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக 2023-ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த அமித் ஷா, “மதத்தின் அடிப்படையில், முஸ்லிம்களுக்கு எந்த விதமான இட ஒதுக்கீடும் அரசியலமைப்பிற்கு விரோதமானது” என்றார்.
“முஸ்லிம் மக்கள்தொகை 50 சதவிகித இட ஒதுக்கீட்டு வரம்பிற்கு அப்பாற்பட்டதா? இது எப்படி அரசியலமைப்புக்கு விரோதமானதாகும்? இது குறித்த அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்” என அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பினார்.
அப்போது எழுந்த அமித் ஷா, அகிலேஷ் யாதவ் கேள்விக்கு விளக்கமளிக்காமல், “சமாஜ்வாதி கட்சி தங்களின் அனைத்துத் தேர்தல் வாய்ப்புகளையும் முஸ்லிம் பெண்களுக்கு வழங்குவதை நாங்கள் தடுக்கவில்லையே…” என்றார்.
இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலையிட்டு, “உறுப்பினர்கள் இத்தகைய நேரடி வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம். அவைநடவடிக்கைகளின்போது கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.




