பாலியல் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதிலும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக வரும் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களால் மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்தப் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் விதமாக இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் உறுதியளித்திருந்தார்.
இதையடுத்து கடந்த வாரம் ஆசிரியர்கள் மீது இருக்கும் பாலியல் புகார்களை தூசி தட்டி எடுத்தது பள்ளிக் கல்வித்துறை. அதில் கடந்த 3 ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. அவற்றில் பாலியல் புகார்களில் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர், அவர்களின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.
தற்போது அதனடிப்படையில் பாலியல் புகார்களில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 25 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

திண்டுக்கல், திருச்சி, நீலகிரி, புதுகை, விழுப்புரம், தர்மபுரி, நெல்லை மாவட்டங்களில் தலா ஓர் ஆசிரியர் என 7 பேர் மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் 15 ஆசிரியர்கள் உள்ளிட்ட 25 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களை ரத்து செய்யும் பணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இறங்கியிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் இன்னும் பல ஆசிரியர்கள் மீது விசாரணைகளும், அதிரடி நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.