வக்பு என்பது ஒரு இஸ்லாமிய பாரம்பர்யமாகும். இந்த வக்புக்காக ஒருவர் தனது சொத்தை மதம், சமூகம் அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நிரந்தரமாக அர்ப்பணிக்கிறார். இந்தச் சொத்து நிரந்தரமாக வக்பு வாரியத்தின் சொத்தாக மாறிவிடும்.
எனினும், இந்தச் சொத்து இஸ்லாமியச் சமூகத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. விவசாய நிலங்கள், கட்டிடங்கள், தர்கா, பள்ளிவாசல், பள்ளி, மருத்துவமனை, கல்லறை, சிறப்பு தொழுகைகளுக்கான ஈத்கா போன்ற பல வடிவங்களில் இந்தச் சொத்துகள் பயன்படுத்தப்படும்.
இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் மட்டத்தில் வக்பு வாரியங்கள் உள்ளன. வக்பு வாரியத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் வக்பு சொத்துக்களை நிர்வகிக்கின்றனர்.
இந்தச் சொத்துக்களின் பதிவேடுகளைப் பராமரிப்பது, அவற்றின் வருமானம் மற்றும் பயன்பாட்டைக் கண்காணிப்பது, ஆக்கிரமிப்புகளில் இருந்து சொத்துக்களைப் பாதுகாப்பது மற்றும் அவற்றை மத, கல்வி மற்றும் சமூக நலக் காரியங்களுக்குப் பயன்படுத்துவதை உறுதி செய்வது ஆகியவை இந்த வாரியத்தின் முதன்மைப் பணிகளாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், மத்திய அரசு கடந்த 2025-ம் ஆண்டு புதிய வந்த வக்பு திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியது. வக்பு வாரியங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதுடன், அவற்றின் நிர்வாகத்தைத் திறம்படச் செய்வதும் இந்தச் சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கம் என மத்திய அரசு தெரிவிக்கிறது.
இந்தப் புதிய மசோதாவின் படி, இந்த வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் அரசால் பரிந்துரைக்கப்படுவார்கள். இத்துடன், வக்பு சொத்துகளின் பதிவு மற்றும் சரியான மதிப்பீடு மறுவரை செய்யப்படும். வக்பு சொத்துக்களின் சரியான மதிப்பு மற்றும் நிலையை மதிப்பிடுவதற்காக மாவட்ட ஆட்சியரிடம் அவற்றைப் பதிவு செய்வது கட்டாயமாகும்.

ஆட்சியர் ஆட்சேபனை தெரிவிக்கும்பட்சத்தில் அந்தச் சொத்து மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு அதிகாரம் வழங்குகிறது. மேலும், இந்த வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் உறுப்பினர்களாகலாம், குறைந்தது இரண்டு உறுப்பினர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக இருப்பது கட்டாயம். இது தவிர, வக்பு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகூட முஸ்லிம் அல்லாதவராகவும் இருக்கலாம் என்று இந்தப் புதிய மசோதா முன்மொழிகிறது.
”இந்தத் திருத்தம் வக்பு வாரியத்தின் செயல்பாட்டில் அரசின் தலையீட்டை அதிகரிக்கும். அதேநேரத்தில், இஸ்லாம் மதத்திலும் அரசு தலையீடு அதிகரிக்கும். மேலும், புதிய சட்டத் திருத்தம், முஸ்லிம் சமூகத்தின் சுதந்திரத்தைப் பாதிக்கும். வக்பு வாரியங்களின் அதிகாரங்களை அரசின் பக்கம் மையப்படுத்தும். இதுபோன்ற அம்சங்கள் நிறைந்த வக்பு மசோதா, அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” என முஸ்லிம்கள் போராட்டங்களை முன்னெடுத்து எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்க்கட்சிகளும் எதிர்க்கின்றன. இந்தச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையிலான அரசு, புதிய வக்பு சட்டத் திருத்தம் 2025-படி 10 உறுப்பினர்களைக் கொண்ட புதிய வக்பு வாரியத்தை அமைத்து அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
இந்த வாரியத்தின் தலைவராக சன்வர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தூரைச் சேர்ந்த மனோஜ் மல்ப்பானி மற்றும் குணா மாவட்டத்தின் ராகோகர் பகுதியைச் சேர்ந்த அனிமேஷ் பார்கவா ஆகிய இருவர், இந்து உறுப்பினர்களாக வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மறுசீரமைக்கப்பட்ட இந்த 10 பேர் கொண்ட வாரியத்தில், தலைவர் சன்வர் படேலைத் தவிர நஜ்மா ஹெப்துல்லா (புது தில்லி), ஆதிப் அகீல் (போபால்), ஃபைசான் கான் (உஜ்ஜைனி), பாத்திமா சவுத்ரி (இந்தோர்), ஷைஸ்தா சுல்தான், ஷபானா கான், மனோஜ் மல்ப்பானி மற்றும் அனிமேஷ் பார்கவா ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் ஆணையர் இந்த வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினராகச் செயல்படுவார்.
இதற்கிடையில், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று அப்போதைய சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, தனது பதவிக்காலம் முடியும் வரை அதாவது 2028 ஏப்ரல் 18 வரை இந்தப் புதிய வாரியத்திலும் உறுப்பினராகத் தொடர்வார் என மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
ஏற்கெனவே மத்திய அரசின் புதிய வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், மத்தியப் பிரதேச அரசின் இந்த நடவடிக்கை விவாதமாகியிருக்கிறது.




