`வருமானத்துக்கு அதிகமாக ரூ.106 கோடி சொத்து!’
புதுச்சேரி 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருந்த நேரம் அது. அப்போது வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக இருந்த ரவிக்குமார் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனையை மேற்கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள், அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்தனர்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, `ரவிக்குமார் தன்னுடைய பெயரிலும், மனைவி பிரியதர்ஷினி, மாமியார் குமுதம் பெயர்களிலும் ரூ.106 கோடி சொத்துகள் சேர்த்திருப்பதாக சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
ரவிக்குமாரின் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவர்களிடம் வாக்குவாதம் செய்தார் பா.ஜ.க அமைச்சர் நமச்சிவாயம். அதிலிருந்தே இருவருக்கும் என்ன தொடர்பு என்பது தெளிவாகப் புரியும்’ என்று வெளிப்படையாகக் குற்றம் சுமத்தினார்.
`மனைவி தொழிலுக்கு கணவர் பொறுப்பாக முடியுமா ?’
அப்போது ஜூ.வியிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், `ரவிக்குமாரின் மனைவி செய்யும் தொழிலுக்கு ரவிக்குமார் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? ரவிக்குமார் என் நண்பர்தான். அதற்காக அவர் தொழில் எதுவும் செய்யக் கூடாதா ?’ என்றார்.
இந்த விவகாரம் குறித்து 03.11.2024 தேதியிட்ட ஜூ.வி இதழில் `நாராயணசாமி Vs நமச்சிவாயம்; புதுவையைக் கலக்கும் சி.பி.ஐ ரெய்டு’ என்ற தலைப்பில் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.
அதன்பிறகு வழக்குக் கிடப்பில் போடப்பட்டது ஒருபுறமிருக்க, 2026 சட்டமன்றத் தேர்தலில் ரவிக்குமாரை என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வில்லியனூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெற வைத்தார் முதல்வர் ரங்கசாமி.

ஆனால் அந்த வெற்றியை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதன் மீதான விசாரணையில்தான் `புதுச்சேரி அரசும் ரவிக்குமாரும் சேர்ந்து அபாயகரமாக உள்கூட்டு சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள்’ என்று புதுச்சேரி அரசை கடுமையாக சாடியிருக்கிறது நீதிமன்றம்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கந்தசாமி, `ரவிக்குமார் மீதான சி.பி.ஐ விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தன்னுடைய வேலையை ராஜினாமா செய்ய முயற்சித்தார். ஆனால் புதுச்சேரி அரசு அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
ஆளுநர் கைலாஷ்நாதன்தான் காரணமா ?
அதையடுத்து அரசுப் பணியில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ரவிக்குமார். அதை ஏற்றுக்கொண்ட தனி நீதிபதி, ரவிக்குமாரை அரசுப் பணியில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டது.
ஆனால் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்க வேண்டிய புதுச்சேரி அரசு, ரவிக்குமாருக்கு சாதகமாக அப்படியே விட்டுவிட்டது. அத்துடன் ஆளுங்கட்சி சார்பில் அவர் எம்.எல்.ஏவாகிவிட்டார். இந்த மோசடியை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? மாதம் ரூ.8,500 சம்பளம் வாங்கும் ஒருவரால் எப்படி கோடிக்கணக்கில் சொத்து சேர்க்க முடியும் ? அதனால்தான் நீதிமன்றம் சென்றேன்” என்கிறார்.

கந்தசாமியின் வழக்கறிஞர் ரவியிடம் பேசியபோது, “எம்.எல்.ஏ ரவிக்குமார் மீது பொதுநல வழக்கு தாக்கல் செய்ய கந்தசாமிக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார் மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்.
அதற்கு, “அப்படி என்றால் உங்கள் அரசு ரவிக்குமார் மீது என்ன நடவடிக்கை எடுத்தது? 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சாதாரண வி.ஏ.ஓ மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து, வருடக்கணக்கில் வழக்கை நடத்துகிறீர்கள். ஆனால் ரவிக்குமார் மீது கோடிக்கணக்கில் சொத்துக் குவித்த சி.பி.ஐ வழக்கு இருக்கிறது.
`ரூ.8,500 சம்பளம் வாங்கிய ஒருவருக்கும் எப்படி கோடிக்கணக்கில் சொத்துகள் ?’
அப்படி இருக்கும்போது அவர் மீது துறை ரீதியான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ராஜினாமாவை நீங்கள் எப்படி ஏற்றீர்கள்? தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்றனர் நீதிபதிகள். அதற்கு, `புதுச்சேரி ஆளுநரின் ஒப்புதலுடன்தான் ராஜினாமா ஏற்கப்பட்டது’ என்றார் மத்திய அரசின் வழக்கறிஞர்.

அதற்கு, `இதுதான் உங்கள் அரசின் கொள்கை என்றால், இதேபோல லஞ்ச வழக்கில் இருக்கும் அனைத்து அரசு ஊழியர்களையும் நீங்கள் ராஜினாமா செய்ய அனுமதிக்கலாமே? மக்கள் உங்களை நம்பித்தான் வாக்களித்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றாதீர்கள், முதுகில் குத்தாதீர்கள்.
இரண்டு வாரங்களுக்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றமே தீவிரமாக பரிசீலிக்கும்’ என்று நீதிபதிகள் கெடு விதித்திருக்கின்றனர்” என்றார்.
இதுகுறித்துப் பேசுவதற்காக எம்.எல்.ஏ ரவிக்குமாரை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.




