மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த நிலையில் மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு பிரிவினரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரிதப்ரத பானர்ஜி தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்திடம் ரிதப்ரத பானர்ஜி பிரிவினர் சார்பில் தங்களுக்கே திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பெரும்பாலானோரின் ஆதரவு இருப்பதாகக் கூறி, கட்சியின் சின்னத்துக்கு அரூப் ராய் உரிமை கோரினார். இதற்கு மம்தா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி பிரிவுக்கும், அதிருப்தி எம்எல்ஏக்கள் பிரிவுக்கும் தேர்தல் ஆணையம் நேற்று (செப்.17)தடைவிதித்தது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, மம்தா பானர்ஜிக்கு ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார்.
மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவில், ” முதலில் சிவசேனா, அடுத்து தேசியவாத காங்கிரஸ், தற்போது திரிணமுல் காங்கிரஸ். பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோத்து ஒரு கட்சியைப் பிளவுபடுத்துகின்றன. பின்னர், கட்சியின் சின்னமும் பறிக்கப்படுகிறது.
ஒரு கட்சியையே திருட முடியும் என்றால், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குகளையும் திருட முடியும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
வாக்குத் திருட்டு; அரசாங்கத் திருட்டு; தற்போது கட்சியும் திருடப்படுகிறது. இவை நம்முடைய ஜனநாயக வீழ்ச்சியின் அடையாளமாக மாறிவிட்டன.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு ரீதியிலான பொறுப்பு, மக்களின் தீர்ப்பைப் பாதுகாப்பதுதான். ஆனால், மக்கள் தீர்ப்பை மதிக்காதோருக்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
இது மம்தா பானர்ஜியின் போராட்டம் மட்டுமல்ல. ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் நியாயமான தேர்தல்களை விரும்பும் ஒவ்வொரு வாக்காளரின் போராட்டம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.




