இந்திய மக்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் கே. சூர்யா பிரசாந்த் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், தமிழக அரசின் 1976-ஆம் ஆண்டு அரசாணைக்கு முழு சட்ட அங்கீகாரம் அளித்தார். இதன்மூலம், தமிழ்நாட்டில் பசு வதை முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகை உட்பட எந்த நாளிலும் தமிழ்நாட்டில் எங்கும் பசுக்களோ, கன்றுகளோ வெட்டப்படக் கூடாது என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் (DGP) உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்கள் தவிர வேறு எந்த இடத்திலும் ஆடு, செம்மறியாடு உள்ளிட்ட விலங்குகளை வெட்ட அனுமதிக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தன் எக்ஸ் பக்கத்தில், “பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் தியாகத் திருநாள் வழிபாட்டில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அமர்வின் முறைகேடான தலையீடு வருத்தமளிக்கிறது.
தியாகத் திருதாள் (பக்ரீத்) பெருநாளை முன்னிட்டு மாடுகள் மற்றும் கன்றுகளை அறுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-ஆவது பிரிவின் விழுமியங்களுக்கு எதிராக அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-ஆவது பிரிவு ஒவ்வொரு குடிமகனுக்கும் தமது மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கவும், பரப்புரை செய்யவும், பின்பற்றவும் உரிமை வழங்குகிறது.
இத்தகைய அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய சூழலில், பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தியாகத் திருநாள் நடைமுறைகளில் நீதித்துறை தலையீடு செய்வது வருத்தமளிக்கிறது. தியாகத் திருநாள் எனும் ஈதுல் அழுஹா (பக்ரீத்) என்பது இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) மற்றும் அவரது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களின் தியாக வரலாற்றை நினைவுகூரும் புனித நாளாகும். இந்த நாளில் மேற்கொள்ளப்படும் குர்பானி வழிபாடு, திறந்த பொது இடங்களில் அல்லாது, வீடுகள் அல்லது பள்ளிவாசல் வளாகங்கள் போன்ற தனியிடங்களில் மரியாதையுடனும் கட்டுப்பாடுகளுடனும் நடைபெற்று வருகிறது.

மேலும், குர்பானிக்காக பசுக்கள் பயன்படுத்தப்படுவதில்லை; காளைகள் அல்லது ஆடுகளே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த K. சூர்யா பிரசாந்த் என்பவர் பசு மாடுகள் மற்றும் பசு கன்றுகளை பொதுவெளியில் பலியிடக் கூடாது என்று தான் மனு செய்திருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் யாரும் பசு மாடுகளையோ அல்லது பசு கன்றுகளையோ இறைவனுக்கு பலியிடுவது கிடையாது மாறாக பெரும்பாலும் ஆடுகளை அல்லது காளை மாடுகளை மட்டுமே இறைவனுக்கு பலியிடுகிறார்கள்.
இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள சூரிய பிரசாந்துக்கு உண்மையில் விலங்குகள் மீது அக்கறை இருந்திருந்தால் மே 18 அன்று கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலாளருக்கு கொடுத்த மனுவில் இந்து கோவில்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஆடு பலியிடக் கூடாது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருப்பார். ஒரு மாச்சரிய உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை தியாகத் திருநாளுக்கு முந்தைய தினம் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அமர்வு விசாரித்திருக்க தேவையில்லை.

மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில், மக்களின் மத உணர்வுகளையும், பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் மதிப்பதே அரசியலமைப்பின் அடிப்படை நோக்கமாகும். அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எதிரான இந்த உத்தரவு மேல்முறையீட்டின் மூலம் சீராய்வு செய்யப்பட்டு உரிய திருத்தம் பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” எனக்குறிப்பிட்டிருக்கிறார்.




