நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேசங்களின் தொகுதி மறுவரையறை மசோதான் என மூன்று மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது. மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் உரையாற்றியபோது, “மகளிர் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைப்பதானது, இந்தியப் பெண்களின் கனவுகளை நம் வரலாற்றிலேயே மிகவும் சர்ச்சைக்குரிய அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றிற்குப் பிணைக் கைதியாக ஆக்குவதற்குச் சமமாகும்… எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள தொகுதி மறுவரையறையின் மூலம், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய மாநிலங்களுக்குக் கூடுதல் அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டு அவர்கள் வெகுமதியளிக்கப்படுவார்கள்.
‘சிறந்த ஆளுமை என்பது அரசியலில் உங்களைப் பொருளற்றதாக்கிவிடும்’ என்ற செய்தியையா நாம் சொல்ல விரும்புகிறோம் என்று நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் நீங்கள் காட்டிய அதே அவசரத்தை, இப்போது இந்தத் தொகுதி மறுவரையறை முன்மொழிவிலும் காட்டுகிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக, அந்த அவசரம் நாட்டிற்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்தத் தொகுதி மறுவரையறை என்பது இறுதியில் ஒரு ‘அரசியல் பணமதிப்பிழப்பு’ நடவடிக்கையாகவே முடியும். இதைச் செய்யாதீர்கள்.” எனத் தெரிவித்திருக்கிறார்.




