“தேர்தல் களம் என்றால் தி.மு.க-வினரை போல சுற்றி சுழன்று பணியாற்றுபவர்கள் இருக்க முடியாது” என்று எதிர்கட்சியினரே சிலாகிக்கும் அளவுக்கு தி.மு.க வினரின் தேர்தல் பணிகள் மெச்சத்தக்க வகையிலேயே இருக்கும். ஆனால், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தி.மு.க அச்சத்தோடு எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு சென்றுள்ளது.
தேர்தல் களத்தில் வீரியமாக செயல்படும், தி.மு.க-வினர் இந்த தேர்தலில் உற்சாகம் குறைவாகவே இருந்தனர். ஒருவேளை தி.மு.க மீண்டும் ஆட்சியை பிடித்தாலும், பெரிய எண்ணிக்கையிலான வெற்றியாக அது இருக்காது என்றே அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. இவ்வளவு நெருக்கடிகளை தி.மு.க சந்திக்க காரணமே, கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சியிலிருந்த போது உட்கட்சி விவகாரங்களை கண்டுகொள்ளாமல் கோட்டை விட்டதே பிரதானம் என்கிறார் தி.மு.க-வின் தலைமை நிர்வாகி ஒருவர்.
ஆட்சிக்கு தி.மு.க வந்த பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தல்கள் முடிவில், தமிழகம் முழுவதும் 75 சதவீத உள்ளாட்சி பதவிகளை தி.மு.க -வே கைப்பற்றியது. நகராட்சி, பேரூராட்சி தலைவர் என பல பொறுப்புகளை தி.மு.கவினரே வைத்திருந்தனர்.ஆனால், இன்றைய நிலையில், அதில் பாதி பதவிகள் மட்டுமே தற்போது தி.மு.க வசம் உள்ளது. பல பதவிகள் பறிபோய்விட்டது. தி.மு.க வினரே எதிர்கட்சிகளோடு அன்ட் கோ போட்டு பதவியை விற்றுவிட்டார்கள். அதற்கு காரணம் உட்கட்சி பஞ்சாயத்துக்கள் தான். பல நிர்வாகிகள், தலைமைக்கு புகார் அளித்தும், அந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் போகவே தலைமை மீதான நம்பிக்கை கட்சியினர் சிலருக்கு குறைந்துவிட்டது.

தி.மு.க விற்கு பலமாக பார்க்கப்படுவது அந்த கட்சியின் உட்கட்சி ஜனநாயகம். பல ஆண்டுகளாக தி.மு.க- வின் பொறுப்புகள் அனைத்துமே, தேர்தல் முறையில் தான் தேர்ந்தெடுக்கப்படும்.ஆனால், இப்போது மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை தாண்டி மாவட்ட பொறுப்பாளர்கள் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது.கட்சிகாரனின் உணர்வுக்கு மாறாக நிர்வாகிகள் நியமனம் நடந்திருக்கிறது.
கட்சி தலைவரே தொண்டனின் கடைசி நம்பிக்கை. தீர்வை தேடிவரும், தொண்டனுக்கு தீர்வை கூட தரவேண்டாம், அவன் குறைகளை காது கொடுத்து கேட்டாலே உற்சாகமாக களமாடுவான். அதை கட்சி தலைமை செய்யாமல் போனதே, தி.மு.க தொண்டர்கள் சோர்வடைய காரணம்” என்று விவரமாக விளக்கினார்.

தி.மு.க வின் பலமே தி.மு.க-வை உணர்வு பூர்வமாக நேசிக்கும் கோடிக்கணக்கான தொண்டர்களே…அதை அறிந்ததாலே கருணாநிதி தி.மு.கவினரை “உடன்பிறப்புகளே…” என வாஞ்சையுடன் அழைத்தார். வருங்காலத்தில் அந்த உரிமையை முதல்வர் ஸ்டாலின் தி.மு.க வினருக்கு வழங்கினாலே,… எத்தனை சினிமா கவர்ச்சிகள் களமாடினாலும், தி.மு.க வின் எழுச்சியே தி.மு.க இயக்கத்தை ஆட்சிக் கட்டிலுக்கு எளிதாக கொண்டு சென்றுவிடும் என்கிறார்கள்.




