தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவிலும் அமைச்சர்களின் அறையிலும் மனு கொடுக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடி வருகின்றனர். அவர்கள் ஏழை எளிய மக்கள் அதிகம் கூடும் தலைமைச் செயலகத்தில் அம்மா உணவகம் இருந்தால் சிறப்பாக இருக்குமென கோரிக்கையும் வைக்கின்றனர்.
தலைமைச் செயலகத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக தலைமைச் செயலகத்தில் சில உணவு விடுதிகளும் இருக்கின்றது. இவை குத்தகைக்கு விடப்பட்ட கேண்டீன்கள்.
இவை போக தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையின் தேநீர் கடைகள், ஆவின் கேண்டீன்கள், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் உணவு விடுதியும் உள்ளே அமைந்திருக்கிறது. இந்த உணவு விடுதிகள் எல்லாவற்றிலுமே வெளியில் விற்கப்படும் விலைக்கே உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

அரசு ஊழியர்கள் அதிகம் பயன்படுத்தும் கேண்டீன்கள் என்பதால் சில கேண்டீன்களில் வழக்கத்தை விட கூடுதலான விலைக்கும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதான் தலைமைச் செயலகத்தை நோக்கி வரும் சாமானியர்களுக்கு சிரமத்தை கொடுத்திருக்கிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தலைமைச் செயலக வட்டாரத்தினர் சிலர், ‘முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுக்க தினம் தோறும் அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்து செல்கின்றனர். அமைச்சர்களின் அறையும் எப்போதும் கூட்டம் நிறைந்தே காணப்படுகிறது. ஏழை எளிய மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்துவிட்டு செல்கின்றனர். அப்படி அவர்கள் காத்திருக்கையில் உணவு வேளையில் சாப்பிட செல்ல நினைத்தால் வழக்கமான விலையிலான கேண்டீன்கள் மட்டுமே இருக்கிறது. இவற்றோடு அம்மா உணவகத்தையும் நிறுவினால் ஏழை எளிய மக்கள் பசியாற உதவியாக இருக்கும். ஏற்கனவே அரசு மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகங்கள் இருக்கிறது. தலைமைச் செயலகத்திலேயே தோட்டக்கலை, சுற்றுலாத்துறை, ஆவின் கேண்டீன்களெல்லாம் இருக்கிறது. அவற்றைப் போல அம்மா உணவகத்துக்கும் இடம் ஒதுக்கி மலிவு விலையில் உணவு கொடுத்தால் மனு அளிக்கவரும் ஏழைகள் பயன்பெறுவர்’ என்கின்றனர்.




