தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் கடைசி மணிநேர அனலில் இருக்கிறது.
இன்று மாலை 6 மணிக்கு மேல், ‘நோ’ தேர்தல் பரப்புரை, ‘நோ’ தேர்தல் பிரசாரம், ‘நோ’ வாக்கு சேகரிப்பு என தேர்தல் சம்பந்தமான அனைத்திற்கும் ‘நோ’.
இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் விதிமுறை 126-ன் கீழ் நடைமுறைக்கு வந்துள்ள ‘கண்டிப்பு’ லிஸ்ட் இதோ:
1. பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு ‘நோ’!
இன்று மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றை ஒருங்கிணைக்கவோ… அதில் கலந்துகொள்ளவோ கூடாது.
2. டிஜிட்டல் விளம்பரம் கட்!
டிவி, எஃப்.எம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், எக்ஸ் என எந்தவொரு சோஷியல் மீடியா மூலமும் தேர்தல் விவகாரங்களை மக்களிடம் கொண்டு செல்லக் கூடாது. இது எஸ்.எம்.எஸ் மற்றும் இன்டர்நெட் விளம்பரங்களுக்கும் பொருந்தும்.
3.பொழுதுபோக்கு வழியிலும் பிரசாரம் கூடாது!
இசை நிகழ்ச்சிகள், தியேட்டர் செயல்பாடுகள் அல்லது எந்தவொரு கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலமும் வாக்காளர்களைக் கவர முயற்சி செய்யக் கூடாது. இந்த விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் (அல்லது இரண்டும்) நிச்சயம் என 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் எச்சரிக்கிறது.
4. வெளியாட்கள் ‘கெட் அவுட்’!
தொகுதிக்குச் சம்பந்தமில்லாத அரசியல் கட்சி நிர்வாகிகள், வெளியூர் ஆட்கள் அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், கெஸ்ட் ஹவுஸ் என எல்லா இடங்களிலும் ‘ரெய்டு’ நடத்தி வெளியாட்கள் யாராவது தங்கியிருக்கிறார்களா என அதிகாரிகள் செக் செய்வார்கள்.

5. வாகனக் கட்டுப்பாடு: யாருக்கு அனுமதி?
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர்களின் வாகன அனுமதி இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. தேர்தல் நாளன்று வேட்பாளர்களுக்குக் கீழ்க்கண்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி:
> வேட்பாளரின் சொந்தப் பயன்பாட்டுக்கு 1 வாகனம்.
> தேர்தல் முகவர் பயன்பாட்டுக்கு தொகுதிக்கு 1 வாகனம்.
மேற்கண்ட வாகனங்களுக்கான அனுமதியை தேர்தல் நடத்தும் அதிகாரி (RO) வழங்கியிருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு: வாக்காளர்களை வண்டி வைத்து வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதும் தண்டனைக்குரிய குற்றம். இது சட்டப்பிரிவு 133-ன் கீழ் முறைகேடாகக் கருதப்படும்.
6. பூத் ஏஜென்ட்கள் கவனத்திற்கு!
வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் அல்லது அதையும் தாண்டி தான் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். அங்கே இரண்டு நபர்கள் மட்டுமே இருக்க அனுமதி உண்டு. தேவையில்லாத கூட்டத்தைக் கூட்டினால் ஆக்ஷன் எடுக்கப்படும்.
மக்களே… ஜனநாயகக் கடமையை ஆற்றத் தயாராகுங்கள்!




