நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியைத் தழுவியதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “#Delimitation: நண்பர்கள் யார், துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது.
புது வரலாறு படைத்துள்ள தி.மு.க.வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது! நமது வெற்றி தொடரட்டும்!” என்கிற கேப்ஷனோடு வீடியோவில் பேசியிருப்பதாவது…
“வணக்கம்… மகிழ்ச்சியுடன் ஒரு புது எனர்ஜியோடு உங்கள் முன்பு நிற்கிறேன். தொகுதி மறுவரையறை என்னும் கருப்பு சட்டத்திற்கு எதிரான நம்முடைய போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த ஆபத்தை ஓராண்டிற்கே முன்பே அறிந்து இந்த வெற்றியைப் பெறுவதற்கான அனைத்து பணிகளையும் அப்போதே நாம் தொடங்கினோம்.
மாநில முதல்வர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் தொடங்கி நேற்று முன்தினம் கருப்புக் கொடி ஏற்றி சட்ட நகலை கொளுத்தியது வரை அனைத்தையும் செய்தோம்.
நேற்று திண்டுக்கல்லில் வெற்றிக்கான வெடியைக் கொளுத்தினேன். ‘தீ பரவட்டும்’ என்று கூறினேன். அது நாடாளுமன்றம் வரை பற்றிக்கொண்டது.
50 – 60களில் பார்த்த பழைய திமுகவை மீண்டும் பார்க்க வேண்டி வரும் என்று எச்சரித்தேன்.
‘அப்படி என்றால் என்ன?’ என்று கேட்ட சில அரைவேக்காடுகளுக்கு, ‘இது தான் திமுக… பாருங்க’ என்று நேற்று ஸ்ட்ராங்காக காட்டியிருக்கிறோம்.
தொகுதி மறுவரையறை என்கிற பெயரில் முழுக்க முழுக்க பாஜகவிற்குச் சாதகமாக கொண்டுவரப்பட்ட கருப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடித்த அனைவருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக என்னுடைய நன்றி.
முக்கியமாக, இதில் முழுக்க முழுக்க என்னுடன் நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு தான் முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை சொல்ல வேண்டும்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்கிற மாறுவேடத்தில் இந்தச் சட்டத்தைப் பாஜக கொண்டுவர பார்த்தது. ஆனால், இந்த ஏமாற்று திட்டத்தை முன் நின்று தோற்கடித்ததே பெண்கள் தான். அவர்களுக்கு என்னுடைய சல்யூட்.
‘இந்தியா கூட்டணி’ கட்சிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி எம்.பிக்களும் ஒன்றாக சேர்ந்து நின்ற காரணத்தினால், இது சாத்தியமாகி இருக்கிறது.
வடக்கு, தெற்கு என நமக்குள் பிளவை ஏற்படுத்தி சண்டை போட வைக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு சரியான சம்மட்டி அடி கிடைத்திருக்கிறது.
12 ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் மோடி அரசு கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா தோல்வி அடைந்திருக்கிறது. இது ஒரு தொடக்கம் தான்.
பாஜக இனி நாடு முழுக்க பெறப்போகிற தோல்விக்கான தொடக்கம் இது.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைகளுக்கான தொடக்கம் இது. நாம் ஒன்றுபட்டால் வெற்றி உறுதி என நான் தொடர்ந்து சொல்லி வந்தேன். அது உண்மை என காட்டியிருக்கும் தொடக்கம் இது.
நேற்று நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பெண்கள் இட ஒதுக்கிட்டிற்கும், இந்த மசோதாவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை… இது ஒரு தேச விரோத சட்டம்… இதை அனுமதிக்கமாட்டோம்… இதை எல்லோரும் சேர்ந்து தோற்கடிப்போம் என தெளிவான உணர்வுகள் வெளியாகின.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும், சோனியா காந்தி அவர்களுக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் மட்டுமல்லாமல் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், தேஜஸ்வி யாதவ், சுப்ரியா சுலே, நவீன் பட்நாயக், ஹேமந்த் சரன், பருக் அப்துல்லா, உத்தவ் தாக்கரே, டி.ராஜா, எம்.ஏ. பேபி, கே. சந்திரசேகர் ராவ், சுக்பீர் சிங் பாதல் ஆகிய தேசிய தலைவர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.
அதுவும் தொடக்கத்தில் இருந்தே இந்த முயற்சியில் என்னுடைய கரங்களை வலுவாக பிடித்த திராவிட உடன்பிறப்புகளான தோழர் பினராயி விஜயன், ரேவந்த் ரெட்டி, சித்தராமையா, டி.கே. சிவகுமார் ஆகியவருக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் நம்முடைய கொள்கை தோழமைகளான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.
இப்போது நாம் பெற்றிருப்பது பாதி வெற்றி தான்.
2001-ம் ஆண்டில் செய்த மாதிரியே, இப்போதும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதாவது 2051-ம் ஆண்டு வரை தொகுதி எண்ணிக்கையை மறுவரையறை செய்வதை தள்ளி வைக்க அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

2023-ம் ஆண்டே நாம் ஆதரித்து நிறைவேற்றிய சட்டத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் பாஜக அரசு உடனடியாக இப்போது இருக்கிற உறுப்பினர் எண்ணிக்கையும் அமல்படுத்த வேண்டும். அது தான் முழு வெற்றியாக அமையும்… அதற்காக போராடுவோம்.
இந்தத் தொகுதி மறுவரையறை சட்டம் யாரெல்லாம் நம் நண்பர்கள் என்று அடையாளம் காட்டியதோடு, தமிழ்நாட்டின் துரோகிகள் யார் என்று அவர்கள் வாயாலேயே சொல்ல வைத்திருக்கிறது.
அப்படி துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியின் அடிமை கும்பலுக்கு தேர்தலுக்கு முன்பே படுதோல்வி கிடைத்திருக்கிறது.
பழனிசாமி டெல்லியுடைய எடுபிடி என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.
நம் திராவிட இயக்க வரலாறு என்னவென்றால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் முதல் சட்ட திருத்தத்திற்குப் போராடி இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது திமுக.
எப்போதெல்லாம் இந்தி திணிப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் உறுதியாக போராடி வென்றது திமுக. அதே மாதிரி தான், நேற்று தமிழ்நாட்டுடைய உரிமைகளை, பிரதிநிதித்துவத்தை தடுக்க நினைத்ததை போராடி வென்றிருக்கிறது திமுக.
இந்தியாவே இன்று திராவிட முன்னேற்ற கழகத்தைப் பற்றி உயர்வாக பேசுகிறது.
நம் வெற்றிகள் தொடரட்டும். தமிழ்நாட்டு மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்க பார்த்த பாஜகவிற்கும் அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுகவிற்கும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மறக்கவே முடியாத மாபெரும் தோல்வியைக் கொடுப்போம். வெல்வோம் ஒன்றாக”.
#Delimitation: நண்பர்கள் யார், துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது.
புது வரலாறு படைத்துள்ள தி.மு.க.வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது! நமது வெற்றி தொடரட்டும்!#வெல்வோம்_ஒன்றாக! https://t.co/h3WeTFv5ON pic.twitter.com/OyxQmotm4a— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 18, 2026




