ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வு வாரியம் (JSSC CGL) நடத்திய தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, லக்னோவைச் சேர்ந்த ‘டிடிபிஎல்’ (TDPL) நிறுவனம் நடத்திய தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, ஒட்டுமொத்தமாக அரசுத் தேர்வு குளறுபடிகளைக் எதிர்த்து மாணவர்கள் கடந்த 24 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், “ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை நடத்தப்பட்ட அரசுப் பணி நியமனத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்துத் தேர்வுகள் குறித்தும் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும், டிடிபிஎல் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைத்துப் பணி நியமனங்களும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், தேர்வு முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமிதாப் கௌஷல் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இருப்பினும், அரசின் இந்த அறிவிப்பை ஏற்க மறுத்துள்ள மாணவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை. இச்சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என மாணவர் தலைவர் ரவீந்திர பாஸ்வான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, உண்ணாவிரதப் போராட்டத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ராஞ்சி சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றொரு மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹதோ, விரைவில் தனது உண்ணாவிரத முடிவுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.




