ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) மற்றும் பெகல்காம் தாக்குதலுக்கு (Pahalgam attack) சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பே, பாகிஸ்தான் தனது உளவு செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தத் தொடங்கிவிட்டது என்கிற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
அந்தத் தாக்குதலுக்கு பின் இரு நாடுகளும் தாக்குதல் நிறுத்தம் செய்து தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. எல்லைகளில் துப்பாக்கிகள் அமைதியாகிவிட்டாலும், விண்வெளியில் பாகிஸ்தான் இந்தியாவின் மேல் தன் பார்வையை இன்னும் தீவிரமாகப் பதித்து வருகிறது என்கிறார்கள் சர்வதேக அரசியல் பார்வையாளர்கள்.
கடந்த 16 மாதங்களில் மட்டும் பாகிஸ்தான் தனது உளவு செயற்கைக்கோள் நெட்வொர்க்கை (Spy satellite network) அசுர வேகத்தில் பலப்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 2025 முதல் 2026 ஜூன் வரையிலான குறுகிய காலத்தில், பாகிஸ்தான் 6 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை (Earth-observation satellites) விண்ணில் செலுத்தி, இந்திய எல்லைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறது என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளது.
1961-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘சுபார்கோ’ (SUPARCO), கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் 15 செயற்கைக்கோள்களை மட்டுமே அனுப்பியிருந்தது. ஆனால், தற்போது ஒரே ஆண்டிற்குள் 6 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது, விண்வெளி ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
“பூர்வீகமாகவே விண்வெளித் துறையில் பின்தங்கியிருந்த ஒரு நாடு, திடீரென இத்தகைய வளர்ச்சியை எட்டுவது சாத்தியமற்றது; இதற்குப் பின்னால் பெரிய பின்னணி உள்ளது” என இஸ்ரோ (ISRO) முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீனக் கூட்டணியும்… காஷ்மீர் மீதான இலக்கும்?
பாகிஸ்தானின் இந்த திடீர் விண்வெளி திட்டங்களுக்கு சீனாவின் முழுமையான தொழில்நுட்ப மற்றும் ஏவுதள ஆதரவே முதன்மைக் காரணம் என்று பாதுகாப்பு நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் ‘PAUSAT-1’ என்ற கியூப்சாட் (CubeSat) செயற்கைக்கோளை அனுப்பிய பாகிஸ்தான், மற்ற செயற்கைக்கோள்களை சீனாவின் உதவியுடனேயே விண்ணில் செலுத்தியுள்ளது.
இதிலும் குறிப்பாக, பாகிஸ்தான் ஏவியுள்ள ‘PRSC-EO3’ செயற்கைக்கோள் வழக்கத்திற்கு மாறான ஒரு விசித்திரமான வட்டப்பாதையில் (Unusual orbit) பயணிப்பதை அமெரிக்காவின் ‘COMSPOC’ நிறுவனம் கண்டறிந்துள்ளது. பொதுவான புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் சூரிய-ஒத்திசைவு வட்டப்பாதையில் (Sun-synchronous orbit) நிலைநிறுத்தப்படும். ஆனால், இந்த செயற்கைக்கோள் 38 டிகிரி சாய்ந்த வட்டப்பாதையில் (38-degree inclined orbit) செலுத்தப்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய கண்காணிப்பு குறையும் என்றாலும், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் (Kashmir) எல்லைப் பகுதிகளை ஒரு நாளைக்கு பலமுறை கண்காணிக்கும் திறனை பாகிஸ்தானுக்கு இது வழங்குகிறது என்கிறார்கள்.
மேலும், பாகிஸ்தான் கடந்த ஆண்டு அனுப்பிய ‘HS-1’ என்பது அதன் முதல் ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் (Hyperspectral) செயற்கைக்கோள் ஆகும். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், ராணுவ முகாம்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள், டாங்குகள் மற்றும் மனிதக் கண்களுக்குப் புலப்படாத கட்டமைப்புகளைக் கூட கண்டறிய முடியும்.
பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கூட்டு விண்வெளி உத்திகள் இவ்வளவு தீவிரமாக இருக்கும் வேளையில், இந்தியாவின் ‘இஸ்ரோ’ (ISRO) கடந்த ஓராண்டில் மூன்று முக்கியமான செயற்கைக்கோள் (Strategic Satellites) திட்டங்களில் சறுக்கல்களைச் சந்தித்துள்ளது. இந்தியாவின் EOS-N1 (அன்வேஷா), EOS-09 (RISAT-1B) மற்றும் வழிகாட்டுதல் தொழில்நுட்பத்திற்கான NVS-02 ஆகிய மூன்று மிஷன்களும் தோல்வியடைந்துள்ளன.

சந்திரயான் மற்றும் ககன்யான் போன்ற அதிமுக்கிய அறிவியல் சார்ந்த திட்டங்களில் இஸ்ரோ அதிக கவனம் செலுத்தியதால், நாட்டின் அவசர பாதுகாப்புத் தேவைகளுக்கான (Strategic requirements) செயற்கைக்கோள் கட்டமைப்பில் சற்றே தொய்வு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.




