தமிழக அரசியலில் தற்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தவெக தனிப்பெரும் கட்சியாக சட்டமன்றத் தேர்தலில் வென்றிருந்தாலும், பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில், காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவளிப்பதாகக் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தவெகவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தன. விசிக-வின் நிலைப்பாட்டை இன்னும் சற்று நேரத்தில் திருமாவளவன் அறிவிக்கிறார்.
மற்றொரு பக்கம், திமுக ஆதரவோடும் அதிமுக ஆட்சியமைக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் பேசப்பட்டு வருகிறது.
அத்துடன், அதிமுகவிலிருந்து சிலர் தவெகவிற்கு ஆதரவளிக்கும் மனநிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
கடந்த சில தினங்களாக, அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியிலுள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று காலை அவர்கள் அனைவரும் சென்னை வந்தனர். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.
தற்போது சி.வி. சண்முகம் தலைமையில், அவருடைய இல்லத்தில் அதிமுகவின் 36 எம்.எல்.ஏக்கள் தனித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர், லீமா ரோஸ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.
இதனால் அதிமுகவில் பரபரப்பு நிலவி வருகிறது. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சிலரும் தவெக-விற்கு ஆதரவளிக்கலாம் என்கிற பேச்சுகளும் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.




