கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினர் சிலர், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா நகர் பகுதிக்கு 21 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்தை இயக்கவிடாமல் தடுத்து வந்தனர். இதனால் அண்ணாநகர் பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இது குறித்து, பொதுமக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.
இதனிடையே சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசுவிடம் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது தலையீட்டின் காரணமாக ஜூன் மாதம் முதல் அண்ணா நகருக்கு 21 என்ற பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர்கள் வன்னியரசு மற்றும் சம்பத்குமார் ஆகியோர் கெம்பனூர் பகுதிக்கு வந்து அண்ணாநகர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் அண்ணா நகரில் இருந்து பொதுமக்களுடன் அமைச்சர்கள் இருவரும் பேருந்தில் ஏறி கெம்பனூர் வரை சென்றனர்.
இதனைத் தொடர்ந்து வன்னியரசு மற்றும் சம்பத்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் சம்பத்குமார், “அண்ணா நகர் பகுதி மக்களின் நீண்ட கால போராட்டம் மற்றும் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை பின்பற்றும் முதல்வர் எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவார்.” என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் வன்னி அரசு “இருபது ஆண்டுகளுக்கு மேலாக அண்ணா நகருக்கு அரசுப் பேருந்து செல்லவில்லை. கடந்த கால அரசுகள் எவ்வித கவலையும் இல்லாமல் அவர்கள் போக்கில் செயல்பட்டார்கள். ஆனால் இன்று போகாத ஊருக்கும், போகாத பேருந்து செல்கிறது என்றால் அது மிகப்பெரிய சாதனை. இது ஒரு நல்ல முன்னெடுப்பு. தொடர்ந்து இது போன்ற செயல்களை செய்ய வேண்டும் என்று என்னை முதல்வர் பாராட்டினார்.
சமூக நல்லிணக்கமே இந்த அரசின் பிரதான செயல்பாடு. அரசு அதிகாரிகள் மக்களுடைய சேவகர்கள். அதிகாரிகள் சாதிய பாகுபாட்டுடனோ, அந்த கண்ணோட்டத்திலோ செயல்படுவார்கள் என்றால் அவர்கள் அரசுப் பணியில் நீடிக்க முடியாது. அதிகாரிகள் அவர்களாகவே அந்தந்த பகுதிகளில் பிரச்னை இருந்தால் முன்வந்து அதனை களைய வேண்டும்” என்றார்.




