மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது ‘தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு’ சென்னை, கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்று வருகிறது.
மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இந்த தென் மண்டல கவுன்ஸிலின் துணைத் தலைவராக பங்கேற்றிருக்கிறார்.
இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் விஜய், ” பண்டைய துறைமுக நகரமான மகாபலிபுரத்திற்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன். நமது அரசியலமைப்பின் நீடித்த தொலைநோக்குப் பார்வையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்திற்காக இன்று நாம் இங்கு கூடியுள்ளோம்.
தென் மாநிலங்கள் இணைந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 30 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி, நமது பிராந்தியத்தை தேசிய பொருளாதாரத்தின் முக்கிய இயந்திரங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன. நாட்டின் உற்பத்தி, ஏற்றுமதி, சேவை மற்றும் கண்டுபிடிப்புகளில் நாம் முன்னணியில் உள்ளோம். ‘வளர்ச்சியடைந்த இந்தியா’வை உருவாக்குவதற்கு நாம் கணிசமான பங்களிப்பை வழங்குவோம். அந்த எண்ணத்தின் அடிப்படையில், சில முன்னுரிமைகளை இந்த மன்றத்தின் முன் வைக்கிறேன்.
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு
பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான இளம் தலைமுறையே நமது நாட்டின் எதிர்காலத்திற்கு அடித்தளமாகும். எனவே, சட்டவிரோத இணையவழி விற்பனை, அங்கீகரிக்கப்படாத விநியோகம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கடத்தல் ஆகியவற்றின் மூலம் போதைப்பொருட்களும், கட்டுப்படுத்தப்பட்ட பிற பொருட்களும் இளைஞர்களுக்கு எளிதில் கிடைப்பதும், அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதும் தீவிர கவலைக்குரிய விஷயமாகும்.
ஆன்லைன் மூலம் வீரியமிக்க மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை முறைப்படுத்தும் சட்ட விதியை வலுப்படுத்தவும், அவற்றின் அங்கீகரிக்கப்படாத விற்பனைக்கு எதிராக கடுமையான அமலாக்கத்தை உறுதி செய்யவும், இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கத் தேவையான சட்டங்களை மறுஆய்வு செய்யவும் இந்திய அரசை வலியுறுத்துகிறேன்.
அதே நேரத்தில், போதைப்பொருள் பயன்பாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு மாநிலங்களுக்கு இடையே நெருங்கிய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, கடுமையான நடவடிக்கை மற்றும் போதைப்பொருள் உற்பத்தி, கடத்தல், விநியோகம் ஆகியவற்றில் ஈடுபடும் நெட்வொர்க்குகளுக்கு எதிராக இணைந்து செயல்படுவதன் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நாம் இணைந்து செயல்பட வேண்டும். ஒரு ஒருங்கிணைந்த பிராந்திய முயற்சி ‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைவது மட்டுமல்லாமல், ‘போதைப்பொருள் இல்லாத தென்னிந்தியா’ மற்றும் நமது இளைஞர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கவும் உதவும்.
பகிரப்பட்ட பொருளாதாரம் மற்றும் தளவாடப் தொகுப்புகள் (Logistics Clusters)
ஒருங்கிணைந்த பொருளாதாரப் பிராந்தியமாகச் சிந்தித்துச் செயல்படுவதே நம் முன் உள்ள மிகப்பெரிய வாய்ப்பு. தென் மாநிலங்கள் முழுவதும் ஒருங்கிணைந்த உற்பத்தி மண்டலங்கள், பகிர்ந்தளிக்கப்பட்ட பன்முகத் தளவாடப் பூங்காக்கள் (Multimodal Logistics Parks) மற்றும் நமது உற்பத்தி மையங்களை துறைமுகங்களுடனும் உலகளாவிய சந்தைகளுடனும் இணைக்கும் சரக்கு மற்றும் தொழிற்துறை வழித்தடங்களை உள்ளடக்கிய பொதுவான பொருளாதார மற்றும் தளவாடப் தொகுப்புகளை இந்தக்குழு ஆதரிக்க வேண்டும் என நான் முன்மொழிகிறேன்.
இத்தகைய முயற்சிகள் தொழில் தொடங்குவதற்கான செலவைக் குறைக்கும், நமது ஏற்றுமதிப் போட்டித்தன்மையை அதிகரிக்கும், தென்னிந்தியாவை வெளிநாட்டு முதலீடுகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றும். மேலும், தொழில்துறையை சிறிய நகரங்களுக்கும் பரப்பி, சமநிலையான பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

இதற்கு ஒரு உடனடி உதாரணம் நம் முன் உள்ளது. கர்நாடகாவின் பொம்மசந்திராவிலிருந்து தமிழ்நாட்டின் ஓசூர் வரை பெங்களூரு மெட்ரோவை நீட்டிப்பதன் மூலம் தென்னிந்தியாவின் முதல் மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ இணைப்பு உருவாக்கப்படும்.
இது பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிட்டி வழித்தடத்தை ஓசூரின் தொழில் மையத்துடன் இணைத்து, இரு மாநிலங்களின் தொழிலாளர்களையும் பொருளாதாரத்தையும் ஒன்றிணைக்கும். இந்தத் திட்டத்தை ஒரு முன்மாதிரியாக நான் வரவேற்கிறேன். ஒன்றிய மற்றும் இரு மாநில அரசுகளின் ஆதரவுடன் இத்திட்டம் விரைவாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இது தெற்கு முழுவதும் உருவாகப்போகும் பல இணைப்புகளுக்கு முதல் படியாக அமையட்டும்.
கரைசார் வளர்ச்சி, நீலப் பொருளாதாரம் (Blue Economy) மற்றும் கடலோரப் பாதுகாப்பு
கடலின் முக்கியத்துவத்தை உணராமல் எந்தவொரு தொலைநோக்குப் பார்வையும் முழுமையடையாது. நாட்டின் நீண்ட கடற்கரையில் குறிப்பிடத்தக்க பங்கையும், இந்தியாவின் மிக முக்கியமான துறைமுகங்கள் சிலவற்றையும் கொண்டுள்ள நமது பிராந்தியமானது, நாட்டின் மிக முக்கியமான மூலோபாய மற்றும் பொருளாதாரச் சொத்துக்களில் ஒன்றாகும்.
கடல்சார் பொருளாதாரத்தை நமது பிராந்திய நிகழ்ச்சி நிரலின் மையப் புள்ளியாக வைக்க வேண்டும் என்று இக்குழுவை கேட்டுக்கொள்கிறேன். துறைமுகங்கள், கடலோரக் கப்பல் போக்குவரத்து, மீன்வளம், கடல்சார் தொழில்கள், கடல்சார் சேவைகள் மற்றும் கடலோர சுற்றுலா ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை ‘நீலப் பொருளாதாரத்தின்’ முழுத் திறனையும் வெளிக்கொணரும்.

கடலோரக் கப்பல் போக்குவரத்தை விரிவாக்குவது தளவாடச் செலவுகளைக் குறைக்கும், நமது சாலைகள் மற்றும் இரயில்வே மீதான அழுத்தத்தைக் குறைக்கும், மேலும் நமது தொழில்துறைகளின் போட்டித்தன்மையை வலுப்படுத்தும். ஒருங்கிணைக்கப்பட்ட கடல்சார் உள்கட்டமைப்பு ஆகியவை முதலீடுகளை ஈர்க்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் தெற்கின் இணைப்பை ஆழப்படுத்தவும் உதவும். 1,076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ள தமிழ்நாடு, இந்தப் பகிர்ந்தளிக்கப்பட்ட கடல்சார் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்ல மற்ற மாநிலங்களுடன் கரம்கோர்க்கத் தயாராக உள்ளது.
நிதி கூட்டாட்சி
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், தேசிய கருவூலத்திற்கும் முதன்மையாகப் பங்களிக்கும் மாநிலங்களில் தென் மாநிலங்கள் தொடர்ச்சியாக முன்னணியில் உள்ளன. விவேகமான நிதி மேலாண்மை, மனித வள மேம்பாட்டிற்கான முதலீடுகள் மற்றும் வெற்றிகரமான மக்கள் தொகைக் கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம், நமது மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான வலுவான பொருளாதாரங்களை உருவாக்கியுள்ளன.
அடுத்த நிதியாணையத்திற்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், நிதிப் பகிர்வு அமைப்பானது ‘தேவை’ மற்றும் ‘செயல்திறன்’ ஆகிய இரண்டையும் அங்கீகரிக்க வேண்டும். வளர்ச்சி, நிதி ஒழுக்கம் மற்றும் மக்கள் தொகை மாற்றத்தில் முதலீடு செய்த மாநிலங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது.

தென் மாநிலங்கள் சலுகைகளை எதிர்பார்க்கவில்லை, மாறாக நிதியியலின் தன்னாட்சியை மதிக்கும், சமத்துவத்துடன் சேர்த்து சிறந்த செயல்பாடுகளையும் அங்கீகரிக்கும் நியாயமான மற்றும் சமமான அணுகுமுறையையே எதிர்பார்க்கின்றன. இதுவே உயர் செயல்திறன் கொண்ட மாநிலங்கள் உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் மனிதவளத்தில் தொடர்ந்து முதலீடு செய்ய வழிவகுக்கும்.
தற்போது, சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பெட்ரோலியம் மற்றும் மதுபானங்களைத் தவிர வேறு எந்த நெகிழ்வான வரி வருவாய் ஆதாரங்களும் மாநிலங்களிடம் இல்லை. அனைத்து மாநில அரசுகளும் இணைந்து வரி விகிதங்களை நிர்ணயிக்கும் நெகிழ்வுத்தன்மையை மீண்டும் பெற உழைக்க வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையேயான நீர் ஆதாரங்கள்
நமது பகிரப்பட்ட நதிகளைப் பற்றி விவாதிக்காமல் தென்னக ஒத்துழைப்பிற்கான எந்தவொரு நிகழ்ச்சி நிரலும் முழுமையடையாது. நீர் என்பது கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கும் விவசாயத்திற்கும் அடிப்படைத் தேவையாகும். மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் மேலாண்மை என்பது ஒத்துழைப்பையும், சட்டத்தின் ஆட்சிக்குக் கீழ்ப்படிதலையும் கோருகிறது.
இரண்டு கோட்பாடுகள் நம்மை வழிநடத்த வேண்டும். முதலாவதாக, கீழ்நிலைப் பாசன மாநிலங்களின் நியாயமான உரிமைகளும், உறுதியான நதிநீரை நம்பியிருக்கும் வாழ்வாதாரங்களும் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள், நடுவர் மன்றங்களின் தீர்ப்புகள் மற்றும் நதி நீர் மேலாண்மைக்காக நிறுவப்பட்ட சட்டரீதியான அமைப்புகளின் முடிவுகள் சொல் மாறாமல் செயல்படுத்தப்பட வேண்டும்.

இந்தக் கோட்பாடுகள் நமது பகிரப்பட்ட நதிப் படுகைகள் அனைத்திற்கும் பொருந்தும். காவிரியைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளையும் குறித்த காலத்தில் செயல்படுத்துவது அவசியமாகும். முல்லைப் பெரியாற்றைப் பொறுத்தவரை, நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நீதிமன்றத் தீர்ப்புகளின் வழிகாட்டலின்படி பாதுகாப்புத் தொடர வேண்டும். மற்றொரு மாநிலத்தின் உரிமையைப் பாதிக்கும் எந்தவொரு மேல்நிலைத் திட்டமும் இந்தச் சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பிற்குள் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
பரஸ்பர நம்பிக்கை, அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் சட்டத்திற்கு மதிப்பளித்தல் ஆகியவற்றுடன் இந்தச் சிக்கல்களை அணுகினால், கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் அதே வேளையில், ஒவ்வொரு பாசன மாநிலத்தின் நலன்களையும் பாதுகாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
நீட்
தமிழ்நாடு அரசு தனது மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், மருத்துவக் கல்வியில் சமமான வாய்ப்பை உறுதி செய்வதிலும் உறுதியோடு உள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) கிராமப்புற பின்னணி கொண்ட மாணவர்களுக்கும், சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சமூகங்களுக்கும் பின்னடைவை ஏற்படுத்துகிறது என்றும், பள்ளிவழிக் கல்வியின் அடிப்படையில் அமைந்த மாநிலத்தின் உள்ளடக்கிய சேர்க்கை மாதிரியை பலவீனப்படுத்துகிறது என்றும் தமிழ்நாடு தொடர்ந்து கூறி வருகிறது. எனவே, தமிழ்நாட்டின் நிரூபிக்கப்பட்ட மற்றும் சமத்துவ சேர்க்கை முறையின்படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் படிப்புகளில் உள்ள அனைத்து மாநில ஒதுக்கீட்டு இடங்களையும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நிரப்ப அனுமதிக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

தென்னிந்தியப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்தல்
இறுதியாக, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் எதிர்காலம் குறித்த மிக முக்கியமான அரசியலமைப்பு விவகாரத்தைப் பற்றி பேச விரும்புகிறேன். 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளைப் பிரிப்பதற்கான தடைக்காலம் முடிவடையும் நிலையை எட்டியுள்ளதாலும், தொகுதி மறுவரையறை மசோதா 2026 பரிசீலிக்கப்படுவதாலும், மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் நாடாளுமன்றத்தில் நமது கூட்டுக்குரல் பலவீனமடைந்து விடுமோ என்ற நியாயமான கவலை தென் மாநிலங்கள் முழுவதும் உள்ளது.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல், மனிதவள மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தென் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. இந்த சாதனைகள் தேசிய முன்னுரிமைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதையே காட்டுகின்றன. அதற்காக நமது பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது. தேசிய இலக்குகளை நிறைவேற்றியதற்காகப் பொதுக் கொள்கையானது மாநிலங்களைத் தண்டிப்பதாக அமைந்துவிடக் கூடாது.
எனவே, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதன் காரணமாக எந்தவொரு மாநிலத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ சதவீதமும் குறையாது என்ற தெளிவான சட்டப்பூர்வமான உறுதிமொழியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இத்தகைய அணுகுமுறை சமத்துவக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும், நமது அரசியலமைப்புச் சட்டம் விரும்பும் கூட்டாட்சி சமநிலையைப் பாதுகாக்கும், மேலும் நமது ஜனநாயக அமைப்புகளின் மீது அனைத்து மாநிலங்களுக்கும் உள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும்.
வலுவான மாநிலங்களே பலமான இந்தியாவை உருவாக்கும் என்று தமிழ்நாடு உறுதியாக நம்புகிறது. அந்த எண்ணத்தில், ‘வளர்ச்சியடைந்த இந்தியா’வை உருவாக்க ஒன்றிய அரசுடனும் நமது சகோதர மாநிலங்களுடனும் இணைந்து பணியாற்ற எங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்” என்று அமித் ஷா முன் முதல்வர் விஜய் பேசியிருக்கிறார்.




