கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன், கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமாரைச் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது, “கோவை தெற்கு தொகுதி முழுக்க கரூரில் இருந்து வந்த 2 ஆயிரம் ரௌடிகள் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு மிரட்டிப் பணம் கொடுப்பதாக எங்களுக்குப் புகார் வந்தது. நாங்கள் பார்க்கச் சென்றபோது, எங்கள் கட்சிக்காரர்களைக் கடித்து வைத்துள்ளார்கள். அவர்கள் என்ன மிருகசாதியா? அவ்வளவு பசியா?
தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. நேற்று 8 இடங்களில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக புகார் அளித்தும், இதுவரை வழக்கு பதிவுசெய்யவில்லை. ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள். இன்று பரிசுப்பொருள்கள் தர உள்ளார்கள். மக்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும், பாரா மிலிட்டரி வைத்து தேர்தலை நடத்த வேண்டுமெனவும் கலெக்டரிடம் மனு அளித்தோம்.
இதே சூழல் இருந்தால் உங்களிடம் பணம் வங்காதவர்கள் எப்படி ஓட்டு போட வருவார்கள்? இது என்ன வியாபாரமா? மற்ற 233 தொகுதிகளில் இந்த மாதிரி நடக்கவில்லை. பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் அளித்தால் பறக்கும் படையினர் 2 மணி நேரத்திற்குப் பிறகுதான் சம்பவ இடத்திற்கு வருகிறார்கள். போலீஸ் இன்னும் தி.மு.க-விற்கு கைப்பாவையாகச் செயல்படுகிறது. இந்த போலீஸை வைத்து தேர்தல் நடத்தினால், நியாயமாக நடக்காது.
நீங்கள் ஸ்டாலின், உதயநிதி, செந்தில் பாலாஜி கன்ட்ரோலில் இல்லை, தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து வேலை செய்யுங்கள். பணப்பட்டுவாடா செய்தவர்களைப் பிடித்து தந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க. வாக்காளர்களுக்குப் பணம் தந்தால் பிடியுங்கள். தி.மு.க-வினர் பட்டப்பகலில் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். அவர்களை தப்பிக்க வைப்பதற்காக பறக்கும் படை தாமதமாக வருகிறது” என்றார்.




