கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள செங்கத்துறை பகுதியை சேர்ந்தவர் செ.ம.வேலுசாமி. அ.தி.மு.க-வின் சீனியர் தலைவர்களில் ஒருவரான இவர், அக்கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் இருந்து, சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். 2001-2006 காலகட்டத்தில் வணிகவரி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராக பணியாற்றியவர். 2011ம் ஆண்டு தேர்தலில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அத்தேர்தலில் வெற்றி பெற்று கோவை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்ற இவருக்கு, கோவை மாவட்டச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. இதனால் அதிகாரமிக்க நபராக செ.ம.வேலுசாமி வலம் வர துவங்கினார்.
செ.ம.வேலுசாமிக்கும், எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்த நிலையில், இவருக்கு எதிராக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர். இந்த சூழலில் 2014ம் ஆண்டில் பல்லடத்தில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற புகாரின் பேரில், செ.ம.வேலுசாமியின் பதவிகள் ஒரே நாளில் பறிக்கப்பட்டன. இதையடுத்து அமைச்சர் பதவிக்கு வந்த எஸ்.பி. வேலுமணி, கட்சியிலும், அ.தி.மு.க ஆட்சியிலும் அதிகாரமிக்க நபராக மாறினார். பின்னர் செ.ம.வேலுசாமியை கட்சியில் தலையெடுக்க விடாமல் எஸ்.பி. வேலுமணி தொடர்ந்து ஓரங்கட்டி வந்தார். அவருக்கு தேர்தல்களில் போட்டியிட வாய்ப்புகளும் மறுக்கப்பட்டன. தி.மு.க உள்ளிட்ட கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தபோதும், கட்சி மாறாமல் தொடர்ந்து அ.தி.மு.க-விலேயே நீடித்து வந்தார்.
இந்த நிலையில் த.வெ.க-விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பான விவகாரத்தில் அ.தி.மு.க இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில், கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எஸ்.பி.வேலுமணியை எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். கட்சி அமைப்பு செயலாளராக இருந்த செ.ம.வேலுசாமிக்கு கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எஸ்.பி. வேலுமணியின் ஓரங்கட்டல் காரணமாக 12 ஆண்டுகளாக ‘வனவாசம்’ அனுபவித்து வந்த செ.ம.வேலுசாமி, மீண்டும் அதிகாரமிக்க பதவிக்கு வந்துள்ளார். எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக அரசியல் செய்ய வலுவான நபர் வேண்டுமென்ற அடிப்படையில், செ.ம.வேலுசாமிக்கு மீண்டும் கட்சி பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதாக அ.தி.மு.க தரப்பில் கூறப்பட்டுள்ளது.




