திருச்செந்தூர் தொகுதி நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சி மற்றும் அரசியல் எதிரிகளை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார். அவரின் உரையில், “தி.மு.க கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்டு, தி.மு.க தொண்டர்களின் உழைப்பால் 5 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என்று முன்மொழிந்த தி.மு.க தலைவரை மறந்துவிட்டு தற்போது துரோகம் இழைத்துவிட்டது. இனிவரும் காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் ராகுல் காந்தியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக யார் வந்தாலும் அவர்களை மக்கள் விரட்டியடிப்பார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் என்ற கட்சியே இல்லாத நிலையை உருவாக்குவோம்” என்றும் எச்சரித்தார். அவரின் உரை சமூக ஊடகங்களிலும் வைரலானது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாக்கூர் தன் எக்ஸ் பக்கத்தில், “அமைச்சர் பதவியும் அதிகாரமும் போன பிறகு, விரக்தியிலும் அகங்காரத்திலும் சிலரின் மொழியின் தரம் எந்த அளவுக்கு கீழே விழுகிறது என்பதற்கான உதாரணம் தான் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு.
நாங்களும் உங்களை அதிகாரத்திற்கு கொண்டு வர உழைத்தவர்கள்தான். எங்களுக்கும் திருப்பி பேச தெரியும். அரசியலிலும் பதிலடி கொடுக்க தெரியும். ஆனால் இன்னும் அரசியல் நாகரிகத்தை மதித்து தி.மு.க தலைமையின் பதிலுக்கு காத்திருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எங்கள் மூத்த தலைவர்களையும் தொடர்ந்து தரக்குறைவாக பேசும் இந்த அரசியலை தி.மு.க தலைமையே ஊக்குவிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. தி.மு.க தலைமை இந்த மொழியை ஆதரிக்கிறீர்களா? இல்லையெனில் உடனடியாக கண்டிக்க வேண்டும்.

இல்லை என்றால், இதே அரசியல் மொழியில் உங்களுக்கு பதிலடி கொடுக்க நாங்களும் தயங்க மாட்டோம். அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், எதிர்க்கட்சியினர் மீது இழிவான வார்த்தைகள் பயன்படுத்துவது அரசியல் கலாசாரம் அல்ல. அது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி. அனிதா ராதாகிருஷ்ணன் தனது வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தி.முக தலைமையும் இதை வெளிப்படையாக கண்டிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.




